காஞ்சியில் நடைபெறும் ஒரு பயிலரங்கில் சென்னையிலிருந்தும் செங்கல்பட்டிலிருந்தும் வந்து கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும். திருநெல்வேலியிலிருந்தும் தூத்துக்குடி ஏரலிலிருந்தும் வருவார்கள் என்றா எதிர்பார்க்க முடியும்! பண்ருட்டியிலிருந்தும் ஜெயங்கொண்டத்திலிருந்தும் தூத்துக்குடி ஏரலிலிருந்தும், மத்தியப்பிரதேச இந்தூரிலிருந்தும் வந்திருந்தார்கள்.
‘சார்! பர்மிஷன் குடுக்கல சார் ஸ்க்கூல்ல. லீவ் போட்டுட்டு பையன கூட்டுட்டு வந்திட்டன் சார். இந்த நிகழ்ச்சிக்காவே மதுரைலேருந்து பையன கூட்டிட்டு வாரன் சார். ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாங்களா சார்?’ என்று சொன்னவரிடம், ‘அய்யா, இது பிள்ளைங்களுக்கான நிகழ்ச்சி இல்லையே! இதுக்கு போயி ஏன் கூட்டிட்டு வந்தீங்க?’ என்று கேட்பதற்குள் ‘நான் இனிமே பாசிட்டிவா இருப்பேன் சார்!’ என்று மொழிகிறான் அவரது பள்ளிப் போகும் பிள்ளை.
‘சார்.. ஃபிராங்க்ளி ஸ்பீக்கிங், லஞ்ச்சுப்கப்புறம் லேட் நைட்டு வரைக்கும் ஓக்கார்றது கஷ்டம். முதல் செஷனோட நான் போயிடுவேன்ன்னு சொல்லிட்டுதான் வந்தேன் என் ஓய்ஃபுகிட்ட. கண்ணைத் திருப்பமுடியல. அண்ட் யு அனவுன்சிடு ப்ரேக். அப்பத்தான் தெரிந்சுது டைம் ஃப்ளைடு. சூப்பர் சார்’ என்று சொன்ன மருத்துவர் ஒருவர் முழு நிகழ்ச்சியிலும் இருந்து நெகிழ்ந்தே போனார்.
‘திங்கட்கிழமை காலை வேலைக்கு வேறுமாதிரி உற்சாகத்தோடு போவேன் அண்ணா! ‘ஜெயிப்பது நிஜம்!’ ‘ என்று குறுஞ்செய்தி அனுப்பினானாம் சென்னையில் மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரியும் தம்பி ஒருவன் அவரை அழைத்து வந்த மலர்ச்சி மாணவர் ஒருவருக்கு.
‘இத்தனை நாட்களாக மலர்ச்சிக்கு வராமல் தள்ளிப் போட்டது எவ்வளவு பெரிய தவறென்று புரிந்தது!’ என்று வந்து பெற்றதற்கு பெருமகிழ்ச்சியும் இத்தனை நாட்களாய் தவற விட்டதற்கு வருத்தமும் கலந்து பகிர்ந்துவிட்டுப் போனார் காப்பீட்டு நிறுவனத்தின் முக்கிய பொறுப்பிலிருக்கும் காரியதரிசி பெண்மணி ஒருவர்.
மலர்ச்சி மாணவர்களுக்கு இந்த பயிலரங்கம் தேவையில்லை, வரவேண்டாம் என்று சொல்லியிருந்தும் ‘கற்றல் தொடரும்’ என்று காரணம் காட்டி வந்திருந்த கோபி, மகாலக்ஷ்மி, கீர்த்திநாதன், குத்தாலிங்கம், செந்தில், பாக்யா, வாசுதேவன், சாந்தி, பாரி, சுந்தர், சரவணன், விஜி, ராம்மோகன் போன்றோருக்கு ‘ஜெயிப்பது நிஜம்’ வேறொரு பரிமாணத்தைத் தந்து தங்களது வேலையை தொழிலை வேறொரு ஆழத்தில் பார்க்க வைத்துவிட்டது.
காஞ்சியில் நடந்த மலர்ச்சியின் ‘ஜெயிப்பது நிஜம்’ பயிலரங்கம் பங்கேற்ற நூற்றியெட்டு பேருக்குள்ளும் ஏதோவொரு விதையை ஊன்றி ஒரு அனுபவத்தைத் தந்து விட்டது. அழுதார்கள், சிரித்தார்கள், உற்சாகமானார்கள், நிமிர்ந்தார்கள், நெக்குருகினார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோயம்பேடு கோல்ட்மைனில் நடந்த ‘ஜெயிப்பது நிஜம்’ நிகழ்ச்சியையும் நேற்று காஞ்சியில் நடந்த ‘ஜெயிப்பது நிஜம்’ நிகழ்ச்சியையும் நினைத்துப் பார்க்கிறேன். இரண்டிலும் பங்கேற்றவர்கள் நான்கு பேர் – பரமன், குத்தாலிங்கம், சாந்தி பாலு, பாக்யலக்ஷ்மி. இரண்டிலும் வந்திருந்தோர் பெரும் பலனடைந்திருக்கிறார்கள் என்றாலும் இந்த நிகழ்சியின் ஆழமும் அனுபவமும் அதிகம். இதில் வளர்ச்சி அதிகம். மூன்றாண்டுகளில் நானும் வளர்ந்திருக்கிறேன் போல!
உன்னதமாக உணர்கிறேன்!
கருவாக்கி உருவாக்கி எனையாண்டு காத்தருளும் இறைவா நன்றி!
பரமன் பச்சைமுத்து
சென்னை
20.08.2017