அத்யாவசியப் பொருள்கள் வாங்குவதற்குத் தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள் என்று அமைச்சர் டி. ஜெயக்குமார் சொன்னதைக் கேட்காமல் அலுவலம் கிளம்பிவிட்டேன் நான். நேற்று இரவு வீட்டிற்குத் திரும்புகையில் கனமழையில் வெள்ளக்காடாக இருந்த காரில் நீந்திச் செல்லும்படி இருந்த வீதிகளா இவை என்று எண்ணுமளவிற்கு தண்ணீர் வடிந்து இருந்தன நான் வழக்கமாக வரும் சாலைகள்.
ஆர் ஏ புரத்தில் நேற்று இரவு பத்து மணிக்கு முழங்கால் வரை நீர் கொண்டிருந்த பகுதிகளில் நீரே இல்லை. கஸ்தூரிரங்கன் சாலையில் ஒரு இடத்தில் மட்டும் ஒதுங்கிச் செல்ல வேண்டிய அளவிற்கு நீர் தேங்கியிருந்தது. கஸ்தூரி ரங்கன் சாலையிலிருந்து இடது திரும்பும் முன்பே போயஸ் தோட்டத்துப் பக்கம் நீர் தேங்கி நிற்பது தெரிந்ததால் அதைத் தவிர்த்து திரும்பாமல் நேராக பயணிக்க வேண்டியிருந்தது. ஜெமினி மேம்பாலத்துக்கு அருகில் டாக்டர் வசீகரன் முடி வெட்டிக்கொள்ளும் ‘தி பார்க்’ எதிரில் ஒரு பெரிய பள்ளத்தைத் தவிர ஸ்டேர்லிங் ரோடு, ஹாரிங்டன் ரோடு, ஹாரிங்டன் சப்வே, அமைந்தகரை, ஷெனாய் நகர் வரை வேறெங்கும் எந்த இடைஞ்சலும் இன்றி பயணிக்க முடிந்தது. நேற்று இரவு இதே வழித்தடத்தில் மிதந்தே செல்ல நேரிட்டது.
: பரமன் பச்சைமுத்து
03.11.2017