‘ஐ… வந்துவிட்டதா!’ என்று அறுபத்தியைந்து வயதுடைய பெண்மணி, அப்போதுதான் சுடச்சுட புதிதாய் வந்த ‘வளர்ச்சி’ இதழை நோக்கி ஒரு விடலைச் சிறுமியைப் போல ஓடியதைப் பார்க்க நேர்ந்தது இன்று. இதழை கையிலெடுத்தவர் அடுத்த பதினைந்து நிமிடத்திற்கு உலகோடு கொண்ட இணைப்பைப் துண்டித்துக் கொண்டு ‘வளர்ச்சி’ இதழோடு மூழ்கி வாசித்ததையும் கவனிக்க நேர்ந்தது.
‘முதுமையைக் கொண்டாடுவோம்… ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு, நிறைய தெளிவு கிடைக்குது!’ என்றார் ஊரிலிருந்து வந்திருந்த 76 வயது மனிதரொருவர். ‘ இந்த கட்டுரைக்கு நன்றி தம்பீ!’ என்று செல்லிடப் பேசியில் அழைத்து நெகிழ்ந்தார் தூத்துக்குடி – சிறுதொண்ட நல்லூரிலிருந்து ஒரு தாய்.
மனநல மருத்துவரான தனது தாய் தொடர்ந்து ‘வளர்ச்சி’ இதழைப் படிப்பதாகவும் சித்திரக் கதையை தனக்காக முதலில் வாசித்துக் காட்டுவாரவர் என்றும் எத்திராஜ் கல்லூரி மாணவி ஒருவர் பகிரக் கேட்டோம் சில மாதங்களுக்கு முன்பு.
‘வளர்ச்சி’ வெறும் இதழல்ல, தனது குரு என்று சொல்லுகிறார் வத்தலகுண்டு அருகிலிருக்கும் T. தேவதானப்பட்டியிலிருந்து சமூக ஆர்வலர் திரு. வாமனன்.
தனது தொழில் நிர்வாகத்தில் செய்த சில திருத்தங்கள் சிவநெறித்தேவன் சொல்லிச் (‘நதி போல ஓடிக்கொண்டிரு…’) செய்தவையே என்கிறார் காஞ்சிபுரத்து செந்தில்.
உறவுகள் சம்மந்தமான கட்டுரைகள் கொண்ட ‘வாசகர்களுக்கு வணக்கம்’ (தலையங்கம்) படித்து பல முறை உணர்ந்தழுதிருக்கிறேன் என்கிறார் கீழப்பாவூரின் குத்தாலிங்கம்.
எப்போதிருந்தோ நடக்கும் எண்ணெய்க் குளியல் வெந்நீருக்கு என்று மாறியது ‘வளர்ச்சி’ படித்த பின்னரே என்கிறார் புதுச்சேரி சண்முகராசன்.
எளிய மனிதர்களின் ‘சாமானியப் பதிவுகள்’ சம்மட்டியாய் இறங்குகிறது எங்களுக்குள் என்கிறார் தூத்துக்குடி மெட்டல்ஸின் கார்த்திகேயன்.
ஒவ்வொரு இதழின் நடுப்பக்கத்திற்காகவும் காத்திருக்கிறார் சென்னை சசிகுமார்.
‘அய்யா… அந்த காசு…பணம்…துட்டு…மணி…மணி…’க்காக காத்திருக்கிறோம்!’ என்கிறார் லேக்மே மகேஷ்.
ஒவ்வொரு மாதமும் தன் சிறு பிள்ளையை முடிவெட்டிக்கொள்ள கூட்டி வரும் போதெல்லாம் ‘வளர்ச்சி’ இதழைப் படிப்பது வாடிக்கையெனவும், ‘இதழைக் காணவில்லையே!’ என்றும் ஒரு வாடிக்கையாளர் பெண்மணி கேட்க, அன்றே இரண்டு இதழ்களுக்கு சந்தா செலுத்தி வர ஏற்பாடு செய்திருக்கிறார்கள் புதுச்சேரி நேச்சுரல்ஸ்ஸில்.
பெரும் ஆர்வத்தோடு வயதுமுதிர்ந்த தன் தாய் மெதுவாக ஆனால் கூர்மையாக ‘வளர்ச்சி’ இதழைப் படிப்பதை படமெடுத்து அனுப்பியிருக்கிறார் மத்தியப் பிரதேசத்து இந்துப்பூரிலிருந்து ரமா ராமச்சந்த்ரன்.
தனது வகுப்பு மாணவர்களிடம் ‘வளர்ச்சி’ இதழைத் தந்து வாசிக்கச் செய்வதாக வாட்ஸ்ஆப்பில் செய்தியறுப்பியுள்ளார் கீழமணக்குடி கிராமத்துப் பள்ளி ஆசிரியை.
‘வளர்ச்சி’ இதழின் முகப்புக் கட்டுரைகள் தனக்கு பெரும் வளர்ச்சி தருவதாக எழுதியிருக்கிறார் பொள்ளாச்சியிலிருந்து திருமதி. பகதீஸ்வரி.
இன்னும் பல பலப் பகிர்வுகள் பள பளவென்று பலரிடமிருந்து. பரவசமூட்டுகின்றன.
‘வளர்ச்சி’ – வளர்ச்சி தந்து வளர்ச்சி பெற்றுள்ளது! பெரும் மகிழ்வு தருகிறது.
வாசித்து, செயல்படுத்தி வளரும் வாசகர்களுக்கு
வணக்கங்கள்!
நன்றி!
பேரன்புடன்,
பரமன் பச்சைமுத்து
ஆசிரியர் – ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ்.