சிறுவனாக இருந்த போது அக்கா கூட்டிச் சென்று கீரப்பாளையம் விஆர்கே டாக்கீசில் காட்டிய படத்தில்தான் முதன்முதலில் ஸ்ரீதேவியை பார்த்தேன் என்று நினைக்கிறேன். அதில் வரும் ‘பெயரைச் சொல்லவா அது நியாயமாகுமா!’ பாடல் என் மனங்கவர்ந்த பாடல். சென்ற வாரம் கூட ஓர் இரவுப்பயணத்தில் முணுமுணுத்தப் பாடல்.
என்னைப் போல் பலருக்கு ‘காற்றில் எந்தன் கீதம்…’ என்ற பாடலில் இளையராஜாவும் ஜென்சியைத் தாண்டி ஸ்ரீதேவியின் முகமுமே தெரியும்.
‘முன்பு ஒரு காலத்துல முருகமலைக் காட்டுக்குள்ள…’ பாடல் இருக்கும் வரை அவரது குரலும் இருக்கும்.
‘நரீ காடு மாறிப் போச்சு, கலரு தேடிப் போச்சி…!’ என்று அவர் மழலையாய் சொல்லும்போது கமல் சொல்லும் அந்த வசனமே இப்போதைக்குப் பொருந்துகிறது – ‘கதையே கெட்டுச்சுப் போ!’
வட இந்தியர்களின் கனவுலகை வெகு காலத்திற்கு உத்தரப்பிரதேசத்து நாயகன் ஒருவனோடு சேர்ந்து தமிழகத்திலிருந்து வந்த ஒரு நாயகி ஆட்சி செய்தார் என்ற வரலாற்றை செய்து விட்டார்.
யாரை எங்கே இட்டுச் சென்று எங்கே முடிக்கிறது வாழ்க்கை என்பது பெரும்புதிர். மீனம்பட்டியில் தொடங்கி கோடம்பாக்கத்தில் துளிர்விட்டு வளர்ந்து மும்பை வழியாக ஒட்டுமொத்த வடஇந்தியாவையும் ஆட்சிசெய்த தாரகை துபாயில் போய் தன் இயக்கத்தை முடித்துக் கொண்டதை வேறு எப்படி சொல்வது!
#RIPSridevi
Facebook.com/ParamanPage