முக்கால் மணி நேரம் நடைப்பயிற்சி செய்தும் வியர்க்காத, காலை எட்டே முக்கால் மணிக்கும் ’17 டிகிரிதான் இங்க, போவியா!’ என்று குளிர்ந்து நிற்கும் ஓசூரின் சிப்காட்டையொட்டிய ஒரு பிசினஸ் ஹோட்டலில் காலை உணவை உண்ணப் போனவன், அதன் மெனுவைப் பார்த்து அசந்து நின்றேன். ஆங்கிலத்தில் ‘அக்காரவடிசல்’ என்றெழுதியிருந்ததைப் பார்த்து பொங்கி வந்த ‘ஆண்டாள்’ நினைவுகளையும் தாண்டி ‘அட…!’ என்றேன் சத்தமாக.
‘அக்காரவடிசலை’ உள்ளே தள்ளி வயிற்றை நிரப்புவோம் என்று தட்டெடுக்க போனவனின் செல்லிடப் பேசி சிணுங்க, எடுத்துப் பார்க்கிறேன். வந்திருந்த குறுஞ்செய்தி அக்காரவடிசலை விட அலாதியான சுவை தந்தது. வயிறு நிறையட்டும் என்று போனவனின் மனது நிறைந்தது.
அட்டகாசமான அருமையான ஓர் உலகம் மலர்ச்சி. ஆசிரியன் கற்பிப்பதை ஓடிச் சென்று செயல்படுத்தி பெரும் உயரமெடுத்து வந்து நிற்கும் மாணவர்களைக் கொண்ட ஓர் உலகம் அது. அரசு உயர் அதிகாரி, நூற்றுக்கணக்கான ஊழியர்களை நிர்வகிக்கும் தலைமை அதிகாரி, குடும்பத்தலைவி, கல்லூரி மாணவி, தொழில் முனைவோன், ஓய்வு பெற்ற முதியவன் என எல்லோரையும் கொண்ட அந்த மலர்ச்சி மாணவர் உலகம், அவர்கள் அணியும் மலர்ச்சி டீ – ஷர்ட்டின் இடப்புற கைப் பக்கத்தில் பொறித்திருப்பதைப் போல (‘STUDENT’) தன்னை எப்போதுமே வாழ்க்கையின் மாணவர்களாகவே வைத்திருக்கிறார்கள். மாணவர்களாகவே எப்போதும் நின்று கற்று அவர்கள் செயல்படுத்துவது ஓர் உன்னத சங்கதி.
வாழ்வியல் ஆசிரியனாய், மலர்ச்சியின் ஆசிரியனாய் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
எங்கும் நிறைந்தோனே, எல்லை இலாதானே… நன்றி!
இந்தப் பிள்ளைகளின் வாழ்வு மேம்படட்டும் இன்னும் இன்னும்… இன்னமும் இன்னமும்…
வாழ்க! வளர்க!
பரமன் பச்சைமுத்து
ஓசூர்
12.01.2019