‘ரிகர்சல் செய்ய வேண்டியிருக்கும்!’ என்று சொல்லி குழுவாக வந்தமர்ந்து தொடங்கியவர்கள், அவர்களின் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லத் தொடங்கியதும், ‘இவருக்கு ரிகர்சல் வேண்டாம். நேரலை போயிடலாம்!’ என்றார்கள்.
மலேசியாவின் பெரும் ஊடகமான ஏஸ்ட்ரோவின் விண்மீன் HD தொலைக்காட்சி நிலையத்திற்கு சென்றிருந்தோம் இன்று காலை. முதலில் பதிவு, அப்புறம் வெட்டி நகாசு செய்தல் என எதுவும் செய்ய முடியாத நேரலை. விண்மீன் சானலின் பெயர் பெற்ற காலை நிகழ்ச்சியான ‘விழுதுகள்’ ( நம்மூர் ‘வணக்கம் தமிழகம்’ போல) நேரலைக்குத்தான் நான் அழைத்துச் செல்லப்பட்டேன்.
ஞாயிறன்று மலேசியாவில் பெங்தோங் பகுதியில் நடக்கும் ‘சிந்தனை செய் மனமே’ நிகழ்வின் ‘ப்ரோமோஷன்’ நிகழ்வாக இந்த நேர்காணல் என்பது அங்கு போன பின்பே அறிய நேர்ந்த்து. அதையொட்டியே அதைச் சுற்றியே கேள்விகள் கேட்கப்பட்டாலும், கிடைத்த அந்த குறைந்த நேரத்தில் அதற்குரிய பதில்களோடு வாழ்வியலையும் மலர்ச்சியையும் கலந்து கட்டித் தர முயற்சித்தோம் முடிந்த வரையில்.
யூ ட்யூபில் நிறைய இவரைப் பார்த்திருக்கிறோம். தன்புனைப்புப் பேச்சாளர். தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் பரமன் பச்சைமுத்து’ என்று அறிமுகம். செய்தார்கள் நேரலையில்.
பதில்கள் தந்த விதத்தைப் கண்டு ‘இன்று உலக யோகா தினம் – சிந்திப்பதைக் குறைத்து அமைதி கொள் என்கிறது யோகா. சிந்தனை செய் மனமே என்கிறது நீங்கள் பேசப்போகும் நிகழ்ச்சி. என்ன செய்ய வேண்டும் பரமன் பச்சைமுத்து ஐயா?’ என்று தடாலடிக் கேள்வி கேட்டு அசத்தினார் தொகுப்பாளினி அகல்யா. (பதிலில் அவர் அசந்ததாக அப்புறம் அவரே சொன்னார்!)
நேரலை என்பதால் நான் பார்க்க முடியவில்லை. மாலை 06.30க்கு மறு ஒலிபரப்பாம். (நான் இருக்கும் ஹோட்டலில் தமிழ் சானல்கள் இல்லை. ஏஎக்ஸ்என்னில் அமெரிக்கன் நிஞ்சாஸ்தான் பார்த்தேன் மதிய உணவிற்கப்புறம் கொஞ்ச நேரம்) நேரலை பார்த்துவிட்டு சிலர் செல்லிடப்பேசியில் அழைத்து நிகழ்ச்சிக்குப் பதிந்ததாக சொல்லப்பட்டேன்.
மலேசிய ஏஸ்ட்ரோ, பொதிகை, கலைஞர் தொலைக்காட்சி என அனுபவங்களைத் திரும்பிப் பார்த்த போது, வருபவர்களை நிறைய ஆராய்ந்து சரியான கேள்விகள் கொண்ட நேர்காணல் மூலம் நடத்தும் விதத்தில் மக்கள் தொலைக்காட்சி மீது பெரும் மரியாதை வருகிறது. அதற்கடுத்து ஏஸ்ட்ரோ விண்மீனில். கிடைத்த கொஞ்ச நேரத்தில் முடிந்ததை செய்தார்கள்.
வணக்கம் மலேசியா!
– பரமன் பச்சைமுத்து
கோலாலம்பூர்,
21.06.2019
#Malarchi
#ParamanInMalaysia