பூவில் வண்டு தேன் பருகுவதை பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறீர்களா? வெறும் மணத்தைக் கொண்டே ஈர்க்கப்பட்டு மலரையடைந்து, ஒரு ஹெலிகாப்டரின் விசிறியின் வேகத்திற்கு அடிக்கும் இறக்கையை சட்டென குறைத்து அலுங்காமல் குலுங்காமல் மலரின் மெல்லிய இதழ்களில் ‘லேண்ட்’ ஆகி சூல் பகுதியில் இறங்கி, அதற்கென உறிஞ்சு கொடுக்குக் குழலை செலுத்தித் தேன் பருகும் லாவகத்தைக் கவனித்திருக்கிறீர்களா!
ஒரு மலரை முடித்து விட்டு அடுத்த மலர், அடுத்த மலர் ‘செல்லமே…்ஒரு பூவைக் கூட விடமாட்டியா, எல்லாத்தையும் முடிச்சிட்டுதான் போவியா நீ!’ என்று நாம் எண்ணுமளவிற்கு கருமமே கண்ணாக இருக்கும் இந்த வண்டைப் பாருங்கள். இடையில் அதே மலரால் ஈர்க்கப்பட்டு வேறொரு வண்டு வந்தால், ‘இன்னொரு வாட்டி இந்த இடத்தில உன்னைப் பாத்தேன்? பாத்த எடத்திலயே குழி தோண்டி பொதைச்சிடுவேன்… ட்டுட்டூ… பாட்ஷா… பாட்ஷா…’ ரகத்தில் அடுத்த வண்டை லேசாக தட்டி அனுப்புவதைப் பாருங்கள்.
மலர்வதுவும், தேன் உற்பத்தி செய்வதும் பூக்களின் வேலை. எந்த வண்டிற்கும் தேன் தர மாட்டேன் என்று சொல்வதில்லை இந்த மலர்கள். மலரின் வீடு தேடி வந்து வயிறார தேனைக் குடித்து விட்டு கால்களில் மகரந்தங்களை ஒட்டிக் கொண்டு போய் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன இந்த வண்டுகள்.
இயற்கையின் படைப்பில் எந்த உயிருமே வீண் இல்லை.
– பரமன் பச்சைமுத்து
திருவிடைமருதூர், மந்த்ர கூடம்
24.02.2019
Facebook.com/ParamanPage
Www.ParamanIn.com