நிலத்தடி நீர் குறைகிறது, நீர் ஆதாரங்கள் சுருங்குகிறது என்றே எல்லோரும் பேசிக்கொண்டேயிருந்தால், எல்லாம் சரியாகிவிடுமா, நீர் பெருகி ஓடி வருமா? சிதம்பரத்தில் ஒரு ஜோதி தெரிகிறது. நெஞ்சில் நம்பிக்கை பிறக்கிறது.
சிதம்பரம் நகரில் நிலத்தடி நீர் குறைந்தது என்ற கதை போய், சுனாமிக்கப்புறம் உப்பு நீர் வருகிறது என்பது விசனமாய் போனது. எல்லோரும் கவலை கொண்டிருக்கும் வேளையில், எங்கிருந்தோ புறப்பட்டார் செங்குட்டுவன் என்றொரு செயல்வீரர். ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான செங்குட்டுவன், சிலரோடு பேசினார், செயலில் இறங்கினார். சிதம்பரம் நகரில் இருக்கும் பதினோரு குளங்களையும் குறிவைத்து இயங்கினார்கள். கால் தூக்கி ஆடுவோன் இருக்கும் நகரில் பல நன்மக்கள் அவரோடு கைகோர்த்தனர். நிலத்தின் மேலிருக்கும் நீர்நிலைகளை சரி செய்தாலே, நிலத்தின் கீழிருக்கும் நிலத்தடி நீர் சரியாகும் என்று அறிவியல் கொண்டு அக்குளங்களை ஆழப்படுத்தினர். ஏழு குளங்களை இது வரையில் தூர் வாரியுள்ளார்கள். அப்புறம் அப்புறம் பெய்த மழையின் உபரிநீரால் உயிர்பெற்றது இக்குளங்கள்.
தற்போதைய செய்தி, சிதம்பரம் நகரில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. உப்புத் தண்ணீர் ஓடிப் போனது. நன்னீர் கிடைக்கிறது. நெஞ்சம் இனிக்கிறது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட இந்த பாக்ஸ் செய்தி பார்த்து, உள்ளம் மகிழ்ந்தது. யார் அந்த செங்குட்டுவன் சார், தெரியாது. ஆனால் பார்க்கவேண்டும், பாராட்ட வேண்டும், என்னால் முடிந்த உதவியை செய்யவேண்டும். ஐயா, நீங்கள் வாழ்க! சிதம்பரத்தில் ஒரு ஜோதி தெரிகிறது, மெல்ல மெல்ல இந்த வெளிச்சம் உலகமெங்கும் பரவட்டும். நன்னீர் கிடைக்கட்டும், தரணி செழிக்கட்டும்.
– பரமன் பச்சைமுத்து.