‘நான் டெல்லிப் பையன். என் அம்மாவிற்கு மூன்று பெண்கள் அப்புறம் நான். இவர்களுக்கு யாருமில்லையேயென்று என்னை அம்மா தத்துக்கொடுத்து விட்டார்கள். நான் பெங்களூருக்கு அனுப்பப்பட்டேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாவிற்கு ஏக்கம் வர நான் திரும்பவும் அழைக்கப்பட்டேன்’
‘வரிசையாப் படங்கள் எல்லாம் ஊத்திகிச்சி. அதான் ரொம்ப நாளாவே படமே பண்ணாம சும்மா இருக்காரு!’ என்று உலகம் பேசும் வேளையில், நெட்ஃபிளிக்ஸுக்காக டேவிட் லெட்டர்மேனிடம் ஷாருக்கான் தந்திருக்கும் நேர்காணல் முக்கியத்துவம் பெறுகிறது. நேர்காணல் நன்று.
நெட்ஃபிளிக்ஸில் கிடைக்கிறது இந்த நேர்காணல், காணலாம்.
என்ன பதில் சொன்னாலும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தாலும் அதில் இறங்கிவிடாமல் தனது அடுத்த கேள்வியை வைக்கும் டேவிட்டும் சரி, எது கேட்டாலும் சமாளித்து பதில் சொல்லும் ஷாரூக்கும் சரி நன்றாக செய்திருக்கிறார்கள்.
‘வாழ்வில் கடலையே பாத்திராத டீன்ஏஜ் பையனான நான் மொபைல்ஃபோன் தொலைத் தொடர்பு என எதுவும் இல்லாத அந்நாளில் அவளைத் தேடி மும்பை கடற்கரைக்கு வந்தேன். கடலையே பார்த்திராத நான் ஒரேயொரு பீச் என்று அவளைத் தேடி வந்தால், இங்கே பல பீச்கள் என்றார்கள். ‘போகலாம்டா!’ என்று நண்பர்கள் வற்புறுத்த, டாக்ஸிகாரரிடம் ‘முன்னூறு ரூவா இருக்கு. இந்தப் பணத்துல எத்தனை பீச் காட்ட முடியுமோ, அத்தனையை காட்டுங்க, அவளைத் தேட வேண்டும்’ என்று சொன்னதும், அதன் பிறகு நடந்ததும் நிஜ வாழ்வுச் சம்பவங்கள் என்றாலும் சினிமாவைப் போலவே இருந்தன.
‘என் மனைவிக்கு என் படங்கள் அவ்வளவாகப் பிடிப்பதே இல்லை’ ‘மகன் இந்த வெளிச்சத்தில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக தூரத்தில் வைத்திருக்கிறோம்!’ என்பவற்றை வெகு இயல்பாகச் சொன்னாலும் எவ்வளவு கடந்திருக்கிறார்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு என்டிடிவியின் முக்கிய உயரிய விருதான தேச அளவிளான ‘எண்டர்டைனர் ஆஃப் த இயர்’ விருதை ரஜினிக்குத் தந்த போது, பொறுக்க முடியாமல் முகம் சுளிக்கும் படி நடந்து கொண்ட ஷாரூக் இல்லை இப்போது. நிறைய மாறியிருக்கிறார் என்பது தெரிகிறது.
வாழ்வின் அனுபவங்களில் நிறைய உள்வாங்கல் ஏற்பட்டு ஆழமாக மாறியிருக்கிறார் மனிதர். அனுபவங்களை தந்து மாற்றங்களைத் தருவதுதானே வாழ்க்கை!
வாழ்க!
– பரமன் பச்சைமுத்து
சென்னை
11.11.2019