வடக்குப் பக்க பலகனியில்
வந்துவிழும் கொஞ்சூண்டு சூரியஒளியில்
வைத்தேன் ஒரு தொட்டி மிளகாய்ச்செடி
கிடைக்கும் கொஞ்ச வெய்யிலை
துணி காய இந்நேரம்
செடி காய இந்நேரம் என்று மனைவியோடு பேசிப் பகுத்தேன்
வீட்டிலிருக்கும் வேளையெல்லாம் வெயிலுக்கு நகர்த்தி நகர்த்தி
வியர்த்து மகிழ்ந்தேன்
வெள்ளை வெளேரென்று
விரிந்து வந்தன பதினைந்து பூக்கள்
உச்சிமுதல் உள்ளங்கால் வரை சிரித்தன என்னுடலின் அங்கங்கள்
பூக்கும் பிறகு காய்க்கும் என்று
கனியாகும் மனதுடன் காத்திருந்தேன்
ஓடி வந்த அணிலொன்று
ஒவ்வோர் பூவாய் முகர்ந்து முகர்ந்து பார்த்தது
பார்த்துக் கொண்டிருக்கையிலே
ஸ்பீல்பெர்க் படத்து டைனோசரைப் போல விழுங்குகிறது
மிளகாய்ப் பூவை ‘ஆ… காரம்!’ என்றெண்ணி ஆகாரம் கொள்கிறது
பூக்களை மட்டும் தின்றுவிட்டு ‘போதும் பரமா!’வென்பது போல் போய்விடுகிறது
நான் நீரூற்ற செடி பூ விட அணில் வர என்ற இந்தப் படலம் தொடர்கிறது
தின்று விட்டுப் போகட்டும் அணில் பிள்ளையென
தினம் தோறும் நீரூற்றி செடி வளர்க்கிறேன் நான்!
– பரமன் பச்சைமுத்து
ஆர் ஏ புரம்
05.07.2020