ஊரே போற்றி மதிக்கும் சில அப்பாக்களை அவர்களது சொந்தப் பிள்ளைகளே அறியாமலிருப்பது போல காந்தியை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தாமல் விட்டுவிட்டோம். அவர்களுக்கு அத்தனை கோடிகளை அள்ளித்தந்து விட்டார் என்பது போன்றவற்றை மட்டுமே எடுத்தியம்பி இளந்தலைமுறைக்கு முன்னே சில திரைகளை எழுப்பி காந்தியின் முக்கிய மற்ற பண்புகளை பார்க்கவிடாமலே செய்து விட்டோம்.
டால்ஸ்டாய் பண்ணை உருவான விதமும், குற்றால அருவிக்குக் கூட்டிப் போன போது ‘என்றைக்கு ஹரிஜனப் பிள்ளைகளும் சமமாக இதில் குளிக்கிறார்களோ, அன்றைக்குக் குளிக்கிறேன்’ என்று விலகிய நிகழ்வும்,
மதுரை மண்ணின் விவசாயிகளால் நடந்த மனமாற்றமும், ‘இமாலயத் தவறு’ என்ற வார்த்தையை உலகில் முதன்முதலில் காந்தி பயன்படுத்திய அந்த நிகழ்வும், தமிழை விரும்பிப் படித்ததை, பாரதிக்கு தமிழில் கொயொப்பமிட்டு கடிதம் அனுப்பியதை, தாய்மொழிக்கல்வி் பற்றிய வலியுறுத்தல்களை, பொதுக்கிணற்றில் தாழ்த்தப்பட்ட ஒருவரை தண்ணீரெடுக்க அனுமதித்த போது மனைவி உட்பட இயக்கத்தாரே எதிரில் நிற்க, புரவலர்கள் நிதியை நிறுத்திட சோற்றுக்கே வழியில்லாத வேளையிலும் அவர் கொண்ட நம்பிக்கையை, வெள்ளையனை வெறுக்காமல் சுதந்திரம் கேட்ட மாண்பை… இவையெல்லாம் நிகழ்ந்தேறிய கணங்களில் என்னவாக உணர்ந்திருந்தார் காந்தியார் என்பனவற்றை சிறுவர்களுக்கும் இளந்தலைமுறைகளுக்கும் கற்பித்திருக்க வேண்டும்.
கட்சிகளைக் கடந்தல்லவா காணப்பட வேண்டியவர் காந்தியார்.
- பரமன் பச்சைமுத்து
02.10.2020
MahatmaGandhi
Gandhi
GandhiJayanthi
Facebook.com/ParamanPage