🌸
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1, மலர்ச்சியின் புத்தாண்டு நிகழ்ச்சி 400 பேர்களுக்கு என்று நடத்தியே வழக்கம். நோய்த்தொற்றிலிருந்து உலகம் மெதுவாக மீண்டு கொண்டிருந்தாலும்,வழக்கமான பெரிய அரங்கு எடுத்து மலர்ச்சி உரை நிகழ்த்த நிறைய கட்டுப்பாடுகள்.
ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு வருபவர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பர் என்பதால் அவர்களுக்காக
மலர்ச்சி அரங்கிலேயே இம்முறை நிகழ்ச்சியை வைத்தோம்.
அறிவித்த இரு தினங்களில் இருக்கைகள் நிறைந்து அரங்கு நிறைந்ததால், அதே நிகழ்ச்சியை ஆன்லைனிலும் தர முடிவெடுத்து விண்ணப்பங்களை ஏற்றோம்.
2 மணி நேரங்கள் வாழ்வியலின் அடிப்படைகள் வேறொரு பரிமாணத்தில் என்று அமைந்த ‘அடுத்த நிலைக்கு உயர ஆசை…’ நேரடியாக அரங்கிலும், இணைய வெளி வழியேயும் நடந்தது.
வழக்கம் போலவே வந்திருந்தோருக்கு செடிகள் வழங்கப்பட்டன. ஆனால் பெருமளவில் லெமன் க்ராஸ், நந்தியாவட்டை, பாரிஜாதம் போன்ற பூச்செடிகள் அதிகமாகவும் ஆல், வேம்பு, நாவல் போன்ற மரக் கன்றுகள் குறைவாகவும் வைத்திருந்தோம்.
நிகழ்ச்சி முடித்து சூடாகப் பறமாறப்பட்ட கலியை களியோடு உண்டு கொண்டே படிகளில் ஏற முற்படுகையில், நிகழ்ச்சிக்கு வந்திருந்த தம்பியொருவன் தூத்துக்குடி மொழியில் எவரிடமோ செல்லிடப் பேசியில் சொல்லி்க் கொண்டிருந்தான், ‘எலே வாழ்க்கை ஒரு சோதனை இல்லை, விபத்தும் இல்லை… வாழ்க்கை ஒரு பரிசு!’
மலர்ச்சி உரை உள்வாங்கப்பட்டு விட்டது என்று மகிழ்வுடன் துள்ளலாக நடக்கிறேன் நான்.
நல்ல தொடக்கம். 2021 நமக்கெல்லாம் நல்ல ஆண்டாக இருக்குமென்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறது ஜனவரி 1.
இறைவனுக்கு நன்றி!
வாழ்க! வளர்க!
- பரமன் பச்சைமுத்து
01.01.2021
சென்னை