குறிப்பட்ட கால இடைவெளி கடந்த பழைய வாகனங்களுக்கு பசுமை வரி என்பது மத்திய அரசால் இப்போது கொண்டு வரப்படுகிறதாம்.
மேற்கத்திய நாடுகள் போல ‘இத்தனை ஆண்டுகளுக்கு மேற்பட்ட வண்டிகளை வைத்துக் கொள்ளக்கூடாது, நசுக்கி அழித்து விட வேண்டும்’ எனும் வகையில் நேரடியாக சொல்லி கட்டுப்படுத்தும் சட்டங்கள் இந்தியாவில் இது வரையில் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை (தெரிந்தவர்கள் சொல்லி உதவவும். நன்றி!). மிகப் புராதனமான வண்டிகளை இயக்குவதால் விபத்து, வளி மாசு போன்ற சிக்கல்கள் வருகின்றது என்பதைக் கருத்தில் கொண்டு இந்தப் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாம்.
இந்த பசுமை வரி சட்டம் சென்ற ஆண்டு விவாதிக்கப்பட்டே இப்போது அமுலுக்கு வருகிறது.
பள்ளிகள், பெருநிறுவனங்கள் என பழைய டீசல் வண்டிகளை ஒட்டுப் போட்டு ஓட்டுபவர்கள் மாற்றட்டும். ஆட்டோ ஓட்டுநர்கள் போன்றோருக்கு மாற்று வண்டிகள் கிடைக்க அரசு ஏதேனும் சலுகை / உதவி புரிந்தால் நன்றாக இருக்கும்.
பழைய வண்டிகளுக்கு கூடுதல் வரி போடுவதே, பழைய வண்டிகள் ஒதுக்கப் பட வேண்டும் என்பதற்காகத்தான். சட்டம் போட்டதோடு நில்லாமல், ஒதுக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்ட பழைய வண்டிகளை என்ன செய்வதென்பது பற்றி திட்டமும் அரசிடம் இருக்க வேண்டும்.
மின்சார வண்டிகளுக்கும், 15 ஆண்டுகளுக்குள் இருக்கும் வண்டிகளுக்கும் பசுமை வரி இல்லையாம்.
கலகலத்து விபத்துகள் ஏற்படுத்தும், டீசல் புகை கக்கி வளி மண்டலத்தை மாசு செய்யும் பழைய வண்டிகள் போகட்டும்.
சூழலியல் ஆர்வலனாக, இதை நான் வரவேற்கிறேன்.
– பரமன் பச்சைமுத்து
29.01.2021