‘மார்ஷியன்’ – ‘செவ்வாய்க் கிரகத் தனிமை’ : பரமன் பச்சைமுத்து
பயணித்துச் சேர்வதற்கே பல மாதங்கள் ஆகும் தூரத்திலிருக்கும், உயிர்வாழக் காற்று, உணவு, உயிர்கள் என எதுவுமில்லாக் கிரகத்தில் ஒருவன் மாட்டிக் கொண்டால் எப்படி இருக்கும்? உயிர்வாழ இருக்கும் உணவும் சொற்ப நிலை, தொலைத் தொடர்போ அற்ப நிலை என்றால் அவனுக்கு எப்படி இருக்கும்? ‘திரும்பிப் போவேனோ, என் மண்ணை மிதிப்பேனோ, மொத்த கிரகத்திலும் யாரும் இல்லை’ என்ற நிலை எப்படியிருக்கும்? ‘செவ்வாய்க் கிரகத் தனிமை’
(தனிமையின் அடர்த்தியை விளிக்…க இன்றிலிருந்து ஒரு புது வழக்கு வழி!)
யாருமில்லா செவ்வாயில் இருக்கும் பொருள்களை யாரோ இடமாற்றம் செய்கிறார்கள் என்பது புகைப்படப் பதிவுகளில் தெரியவந்தால் நாசாவின் வயிற்றில் எவ்வளவு புளி கரையும்? இறந்து விட்டான் என நினைக்கப்பட்டவன் ‘ஹாய், ஐ’ம் மார்க் வாட்னி, அலைவ்!’ என்று செவ்வாயிலிருந்து தகவல் வந்தால் பூமி எப்படி அதிரும்,
இறந்து விட்டான் என்று விட்டுவிட்டு பூமி நோக்கிப் பயணிப்பவர்களுக்கு இது பாதி வழியில் தெரிய வந்தால் மனம் எப்படித் தவிக்கும்? இப்படியான உணர்ச்சிகளை படம் நெடுக வைத்து பின்னித் தந்துள்ளனர்.
சூடானில் மாட்டி போராடும் ‘மரியான்’னாக இருந்தாலும் சரி, செவ்வாயில் மாட்டி போராடும் ‘செவ்வாயன் மாட் டாமன்’னாக இருந்தாலும் சரி, படம் நெடுக போராடி, எழுந்து, சறுகி, திரும்ப எழுந்து இறுதியில் தங்கள் மண்ணை மிதிப்பார்கள் என்பது உள்ளூர்-உலக சினிமாக்களின் இயல்பு. என்றாலும், கொடுத்த விதத்தை பாராட்டியே ஆக வேண்டும்.
‘செவ்வாயில் காற்றின் அடர்த்தி மிக மிக குறைவு. பூமியோடு ஒப்பிடுகையில் வெறும் 1சதவீதம்தான் இருக்கும். நூறு கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றில் வெறுமனே நிற்க முடியும். ஆரம்பத்தில் காண்பிக்கப் படும் பனிப்புயல் அறிவியல்படி தவறானது’ என்றெல்லாம் விமர்சனங்கள் கிளப்புவர்கள் கிளப்பட்டும்.
ஒரு உலக சினிமா ரசிகனுக்கு கிடைப்பது, ஆரம்பத்ததிலிருந்து இறுதி வரை போரடிக்காத புது அனுவம். அந்த வகையில் இயக்குஞருக்கும் குழுவிற்கும் பெரும் வெற்றி!
‘எல்லோரும் இருந்தும் தனிமையாய் உணர்வதும்,
யாரும் இல்லாத போதும் எல்லாமும் இருப்பதாய் உணர்வதும் அவரவர் மனநிலையே!’ என்பதை பொட்டிலடித்து சொல்லும் படம்.
வி-டாக்கீஸ் வெர்டிக்ட் – ‘மார்ஷியன்’ : மனம் மயக்குபவன். அறிவியல் புனை கதைகள் விரும்புவோர்க்கான படம்.
தமிழில் என்ன தலைப்பு தருவது ‘செவ்வாயன்’ (கருவாயன் என்பது போல)? ‘செவ்வாய் கிரகத் தனிமை’ !
: திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து