தியானத்திலிருந்து மெதுவே மீண்டு வெளி வருகையில் பால்கனிக்கு பக்கத்தில் நிற்கும் கருவேப்பிலை மரம் கூட தியானத்தில் உறைந்து நிற்பதாய் தோன்றுகிறது. மேற்பக்க கிளையின் இலைகள் காற்றில் ஆடினாலும் வேப்ப மரம் உள்ளே பெரும் அமைதி கொண்டு நின்று தியானிப்பதாகவே தோன்றுகிறது. தூரத்து மொட்டைமாடியில் காயவைத்த துணிகளை எடுக்கும் யாரோ ஒரு அக்கா மட்டும் ஏன் இத்தனை துரித கதியில் இயங்குகிறாள் என்று தோன்றுகிறது.
சுவர்க்கடிகார ‘டிக்’கே பெருஞ்சத்தமாக கேட்கிறதே, என் வீட்டு தொலைக் காட்சி செய்திகள் போடும் சத்தம் இந்த மாமரத்துக் கிளிக்கு பெருஞ்சத்தமாயிறாதா? இந்த மரத்தின் தனிமை தவத்தைக் கலைக்காதா?
இந்த மாமரம் போல யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல், உதவி புரிந்து கொண்டு, தன் பணியை செய்து கொண்டு வாழ ஆசையாய் இருக்கிறது. மாமரத்தை கட்டித் தழுவ ஆசை எழுகிறது.
பரமன் பச்சைமுத்து
ஆர் ஏ புரம்
09.01.2016
நீங்கள் மனித வளம் மட்டுமல்ல ! நீங்கள் நீர் வளம், நில வளம், தாவிரவளம் என அனைத்தையும் ஆளும் ஆளுமை அருமை பரமன்! அற்புதம் ….
தியானம் பற்றி ஜெயமோஹன் கருத்து !
நம் தியான மரபில் மனதை மனச்செயல் என்றுதான் சொல்கிறார்கள். அது ஒருசெயல்பாடு. ஓர் அமைப்போ பொருளோ அல்ல. ஒவ்வொரு கணமும் அது நமக்கு தன்னைக் காட்டியபடியேதான் இருக்கிறது. நாம் நம் மனதை உணர்ந்த அக்கணமே மனம் இரண்டாகப்பிரிந்து ஒரு பகுதி நாம் ஆக மாறி மறுபகுதி நம் மனமாக ஆகி நாம் மனதைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். இது மிக விந்தையான ஒரு செயல். ஏனென்றால் நாம் பார்க்கிறோம் என உணர்ந்ததுமே நாம் பார்ப்பதை நாம் பார்க்க ஆரம்பிக்கிறோம்.
இந்த மனச்செயல் நின்று, அது இல்லமலாகிவிடுவதைப்போன்ற ஒரு தருணம் நமக்கெல்லாம் ஏற்படுவது உண்டு. ஒரு புத்தம்புதிய அனுபவத்தை நாம் அறியும்போது நாம் சிலகணம் மனமிலாதவர்கள் ஆகிறோம். உடனே நாம் அப்படி இருந்ததை நாம் உணரும்போது அந்த நிலை கலைந்து மனம் செயல்பட ஆரம்பித்துவிடுகிறது. ஓர் இயற்கைக் காட்சியைக் காணும்போது சிலகணங்கள் அப்படி ஆகிவிடுகிரது. நல்ல இசை பலகணங்கள் அப்படி நம்மை ஆக்கிவிடுகிறது.
இக்கணங்களையே நாம் மெய்மறத்தல் என்று சொல்கிறோம். ஆழமான பொருள்கொண்ட சொல் இது– தமிழில் அடிப்படையான எல்லாச் சொற்களும் தத்துவகனம் கொண்டவை. நம் மரபு மெய் என்று சொல்வது உண்மை,உடல் இரண்டையும்தான். உண்மை என்ற சொல் உண்டு என்றசொல்லில் இருந்து உருவானது. அதாவது இருத்தல் .
உள்ளதே உண்மை. அதுவே உடல். இந்த நோக்கில் உடலே உண்மை. உள்ளம் என்னும் சொல் அதிலிருந்து வந்தது. உள்ளே இருப்பது உள்ளம். அங்கே நிகழ்வது உள்ளுதல் அல்லது நினைத்தல். அதாவது மனித இருப்பு என்பது உள்ளமும் உடலும் சேர்ந்த ஒரு நிலை. அந்த நிலையை முற்றாக மறந்த நிலையையே நாம் மெய்மறத்தல் என்கிறோம். உள்ளுதலும், உண்மையும் இல்லாமலாகும் கணம்.
அந்தச்செயலே இயல்பான தியானமாகும்.
இப்படிப்பட்ட தியானத்தையே தன் வாழ்நாள் முழுதும் செய்யும் “மரம்” எப்போதும் தான் என்னும் செருக்கே ( Ego ) எதிலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், தன் நலம் என்பதே சற்றும் இல்லாமல் எவரிடமும் எவ்வித வியாபாரமும் செய்யாமல் பிறருக்கு எவ்வித எதிர்பார்ப்பே இல்லாமல் உதவுதல் மட்டுமே தன் வாழ்வின் கடனாக பயணிக்கிறது.
அந்த நிலைக்கு வணிக நோக்கமுள்ளவர்கள் ஒருபோதும் ஊடுருவிச் செல்லவே இயலாது !
_____________________________________
மரம் குறித்த மெய்சிலிர்த்த கவிதை !
– K.B.பாலாஜி என்பவர் எழுதியது !
______________________________________
நிலமகள் மடியில் நங்கூரமிட்டு அமர்ந்து,
வானமகள் விரிமுகம் கண்டு விழித்து ,
காற்றின் கறைபடிந்த கற்பை மீட்டெடுத்து,
நீரையே நிலமகளுக்கு பாலாக ஊட்டி,
நெருப்புக்கு இரையானாலும் நிலத்துக்கு உரமாவேன் .
பஞ்சபூதங்களின் பணியாளன்
வண்ண பறவைகளின் வசந்த கால ஊஞ்சல்
கற்கால மனிதனின் மாட மாளிகை
தற்கால மனிதனின் தன்னலமற்ற சேவகன்
பாருக்கே பசுமை ஆடை போற்றிய பேகன்
இயற்கையின் உயிர்நாடி !
ஆனாலும் நான் ஓரறிவு பெற்றவன் .
வணக்கம். புதிது நீங்கள் எனக்கு. புதிது நான்(ஆ,இ) நான் பார்க்கும் உலகம் அதநிலும் நீங்கள் உணர்த்திய உலகம் புதிது
வணக்கம். புதிது நீங்கள் எனக்கு. புதிது நான்(ஆ,இ) நான் பார்க்கும் உலகம் அதநிலும் நீங்கள் உணர்த்திய உலகம் புதிது
வாழ்க! வளர்க!