சில நிகழ்வுகள் நடந்தேறும் போது எதற்காக அவை நடத்தி வைக்கப்படுகின்றன என்பது என்பது முழுமையாக புரியாவிட்டாலும் அவை மிக முக்கியமானவை என்பது வரையில் மட்டுமாவது புரிகிறது. இன்று நடந்த நிகழ்வுகள் அவ்வண்ணமே. நினைத்தேப் பார்க்காத ஒன்று நடந்தது.
இன்று மிக முக்கியமான நாள்.
ஆழியாறு வேதாத்ரி மகரிஷி அவர்களின் ‘மனவளக்கலை’ மன்றத்தின் ஆசிரமம் ‘அறிவுத் திருக்கோவில்’லுக்கு நான் அழைக்கப்பட்ட நிகழ்வு நடந்தேறியது. உலகம் முழுவதிலுமிருந்து முதுகலைப் பட்டம் முடித்து (நாளைய ஆசிரியர்கள்) செல்லும் 1…500 மாணவர்களுக்கு ‘மலர்ச்சி உரை’ ஆற்றி அவர்களது பட்டயச் சான்றிதழ்களைத் தரும் பேறு வந்தது என்பதை விட வேதாத்ரி ஐயா வாழ்ந்திருந்த அந்த அறையில் அடங்கிய அந்த மண்டபத்தில் அமைதியில் இருக்கும் அனுபவம் பெற்றேன்.
முக்கிய அரங்கம் என்று சொல்லப்படும் அந்த அரங்கின் மேடையில்
வேதாத்ரி ஐயாவின் இடத்தை நிரப்பி பயிற்சிகள் தரும் பேராசிரியர் அவர்களோடும் மற்றுமுள்ள தலைமை நிர்வாகிகளோடும் அமர்த்தி வைக்கப்பட்டேன். சில நிமிட மலர்ச்சி உரை அந்த 1500 பேருக்கும் கண்ணீரையும் சிரிப்பையும் வரவழைத்தது.
லண்டனிலிருந்து வந்திருந்த மாணவர்கள் மிக மகிழ்ந்து நெகிழ்ந்து ‘வளர்ச்சி’ பற்றியறிந்து சந்தா கேட்டது கூடுதல் நிகழ்வு.
தலைமையிடத்து பேராசிரியரை தழுவியணைத்து சென்றதில் நெகிழ்ந்த அவர் திரும்பி வந்து ஒரு நூலை அன்புடன் தந்து ‘திரும்பவும் வரவேண்டும்’ என்று கூறியதும், புறப்படும் போது உள்ளே ஏற்பட்ட சில உணர்வுகளும் உன்னதமானவை.
வேதாத்ரி ஐயா உருவாக்கிய இது எவ்வளவு பெரிய ஆலமரம், எத்தனை பேருக்கு நிழல் தந்து கனி தந்து களிப்படையச் செய்திருக்கிறது!
அந்த மண்ணிற்கு என்னைக் கூட்டிச் சென்ற இறைவா நன்றி!
கருவாக்கி உருவாக்கி எனையாண்டு காத்தருளும் இறைவா நன்றி!
– பரமன் பச்சைமுத்து
பொள்ளாச்சி
22.03.2017