கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் (தினமணி முன்னாள் ஆசிரியர்), வில்லிசைச் கலைஞர் சுப்பு ஆறுமுகம், இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி, கரிசல்காட்டு கதைசொல்லி கி.ரா, திண்டிவனத்து தமிழ்ப்பள்ளி பேராசிரியர் ஆகியோர்க்கு இந்து தமிழ் நாளிதழ் ‘தமிழ் திரு’ விருதுகள் தந்து கௌரவித்தது அட்டகாசம்.
குடவாயில் பாலசுப்ரமணியம் சொன்ன தமிழக நீர் மேலாண்மையைப் பற்றிய அரிய தகவல்கள் சில கண்ணில் நீர் கட்ட வைத்துவிட்டது.
கமலஹாசன் அட்டகாசமான ஓர் ஆளுமை என்பதை மறுபடியும் நிரூபித்தார். குடவாயில் பாலசுப்ரமணியத்தையும், விவசாயிகள் போராட்ட பாண்டியனையும், நீதிபதி அரிபரந்தாமனையும் அழைத்து வந்து கலந்துரையாட விட்டது, ‘ஆமாம்… பிக்பாஸ் மேடையை பயன்படுத்துகிறேன். ஆனால் அதில் தர வேண்டியதை நிச்சயம் தருவேன்’ என்றது ஆகியவை எல்லாம் கமலின் சாதுரியங்கள்.
‘எப்போ அரசியலுக்கு வருவீங்க?’ ‘தேதி பிரகடனப் படுத்திடலாமா?’ ‘ரஜினியோடு சேர்வீர்களா?’ ‘அப்பல்லாம் பேசாம இப்ப மட்டும் பேசறீங்களே?’ ‘ஏன் கேரள முதல்வரை பாக்கறீங்களே ஏன் ?’ என்ற வாசகர்களின் கேள்வியை நேராய் எதிர்கொண்டு நறுக் நறுக்கென்று கமல் பதிலளித்து அசத்தியது அட்டகாசம்.
தமிழில் பொழிவார் என்று ‘யாதும் தமிழே’க்கு வந்த பலருக்கு, தான் வரப்போகும் அரசியல் பற்றிய தயாரிப்பு மேடையாக அதைப் பயன்படுத்தியது ஏமாற்றமாக இருந்தது.
இன்று மதன் கார்க்கியோடு வரும் வைரமுத்து ஏமாற்ற மாட்டார் என்று நம்புகிறோம்.
பரமன் பச்சைமுத்து
16.09.2017
Www.ParamanIn.com