ஒரு சிற்றூரின் வயல்களைத் தாண்டிய வாய்க்காலின் மதகில் தன் மாமாவோடு கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து மீன்கொத்தியை பார்க்கும் எம்ஏ படித்த காசு சேர்க்கத் தெரியாத ஒருவன், தன் அனுபவமாக அவ்வூரில் நடந்த நிகழ்வுகளைச் சொல்வதாகத் தொடங்கும் கதை மெள்ள மெள்ள படமாகக் காட்சியாக விரிந்து உச்சத்தில் ‘பொளேர்’ என்ற ஓர் அறையுடன் முடிந்து நிற்கிறது.
படு கிராமமான ஓர் ஊருக்கு வட இந்தியக் கல்கத்தாவிலிருந்து வருகை தரும் உயர் தட்டு நாரீமணி ஏற்படுத்தும் அதிர்வுகளை அழகாகச் சொல்கிறது குறுநாவல். ஆறு, ஏழு பாத்திரங்கள்தான், ஆனால் அழகாக வார்த்துவிடுகிறார் நம் மனக்கண்ணில்.
2018ல் வாசிக்கும் என்னை ‘ஊப்ஸ்… அட!’ என்று அதிர வைத்த இந்த நாவல் 1959ல் சுதேசமித்திரனில் எழுதப்பட்டதாம் என்பது சிறப்பு ‘ஊப்ஸ்…!’ செய்தி.
1959லேயே இப்படி ஒரு கதையை முடித்து எழுதியிருந்தால், எப்பேர்ப்பட்ட எழுத்தாளராய் இருப்பார் அவர்!
தி. ஜானகிராமன் பெரும் ஆளுமை!
நிச்சயம் படியுங்கள் – திஜவின் ‘கமலம்’
[தி ஜானகிராமன் சிறுகதைகள்,
முழுத்தொகுப்பு, காலச்சுவடு]
– பரமன் பச்சைமுத்து
சென்னை
19.07.2018
Www.ParamanIn.com