பச்சை பூவரசங்கழிகளை ஒடித்து இழுத்து சணல் கொண்டு கட்டி வில்லாக்கி, தென்னை ஈர்க்குச்சிகளை (விளக்கமாற்றுக் குச்சிகளை) அம்புகளாக்கி அர்ச்சுனானாக ராவணனாக ராமனாக உருமாறி விளையாடியிருக்கிறேன், சரவணனோடும் ஆளவந்தாராடும் சிறுவனாக இருந்த போது.
அதன் பிறகு இத்தனையாண்டுகளில் வில் வைத்து விளையாடிய சிறுவர்கள் சொற்பமாய் இருந்திருக்கலாம் என்றாலும், நான் பார்க்க நேரிடவில்லை. ‘அவெஞ்சர்ஸ்’ வகை ‘பிளாஸ்டிக் போ ஆரோ கன்’ அல்ல, கழி வளைத்து கயிறு நாண் கொண்ட வில் கொண்ட சிறுவர் விளையாட்டைப் பார்க்க வில்லை.
தோளில் வில்லையும் பின்புற டி-ஷர்ட்டையே அம்பறாத் தூணியாகவும் கொண்ட வில்லாளனை இன்று என் அடுக்ககக் குடியிருப்பின் பார்க்கிங் பகுதியினருகில் பார்க்க நேர்ந்தது.
இப்படி உருவகத்திலும் கற்பனையிலும் சஞ்சரித்து விளையாடும் சிறுவர்களை பிடிக்குமெனக்கு. அவர்கள் வாழ்வின் மீது ஈர்ப்பு கொள்வார்கள். அது ஒரு தனி உலகம், உன்னத உலகம்.
தன்னை பாகுபலியாக உருவகப் படுத்திக் கொள்வானா!
– பரமன் பச்சைமுத்து
04.04.2021