பன்னிரண்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்களும் மாணவிகளுமாக இருநூற்றியைம்பது பேர் தங்களது ஆசிரியப் பெருமக்களோடு கலந்து அமர்ந்திருக்கும் அவையில் ‘படிப்பில் சுட்டி தேர்வில் வெற்றி!’ என்னும் தலைப்பில் உரையாற்றும் வாய்ப்புப் பெற்றேன்.
பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் மலர்ச்சி மாணவர்கள் நிர்வகித்து நடத்தும் ‘மாணவர் மலர்ச்சி’ திட்டத்தின் இவ்வாண்டு வேலைகள் தொடங்கும் இடமாக சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள ‘கோலப்பெருமாள் பள்ளி’யின் நிகழ்ச்சி அமைந்தது.
‘ஐ வோன்ட் கெட் ஸ்கேர்டு ஆஃப் எக்ஸாம் ஹென்ஸ் ஃபோர்த்’ ‘ஐ காட் த பெஸ்ட் டெக்னிக்ஸ் நொவ்’ என்று முறையே பன்னிரண்டாம் வகுப்பின் மத்துரும் சுஜிதாவும் இறுதியில் சொன்னது, இரண்டு மணிநேரம் வியர்வை சொட்ட சொட்ட அணிந்திருந்த வெயிஸ்ட் கோட் நனைய மலர்ச்சி உரை ஆற்றியது உருப்படியாகவே போனது என்றோர் உணர்வைத் தந்தது.
இருந்த இருநூற்றைம்பதில் இருபது மாணவர்கள் மாறினாலும் என் வியர்வைக்கு பலன் உண்டு. இதற்காக உழைத்த மலர்ச்சி மாணவர்கள் குத்தாலிங்கம், தனுஜா, அனுபமா ஆகியோரது முயற்சிக்கு பலன் உண்டு.
அம் மாணவர்கள் வெற்றி பெற பிரார்த்தனைகள்!
வாழ்க! வளர்க!
பரமன் பச்சைமுத்து