சொந்த மகள், ஊரின் பிரபல மருத்துவர், அரசியல் செல்வாக்குள்ள தொழிலதிபர், அன்றாடங்காய்ச்சிகளின் சமையல் காண்ட்ராக்டர், தனது நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள் என உலகில் எவரது மனதைப் பற்றியும் சட்டை செய்யாமல் தனது செய்கைகளால் வன்முறை காட்டும், ‘அடிச்சிட்டுத்தான் பேசுவாள், இதயமே இல்லாதவள்!’ என்றே விளிக்கப்படும் ஒரு தடாலடி முரட்டுப் பெண் காவல்துறையதிகாரி… உலகமே வன்முறை காட்டும் இடத்தில் மென்முறை காட்டி மனதை காயப்படுத்தாமல் மயிலிறகு தடவுகிறாள். அங்கே ‘அம்மா… உங்களுக்குப் பெரிய மனசும்மா!’ என்று விளிம்பு நிலை மனிதனொருவனால் வாழ்த்தப்படுகிறாள். இதுதான் கோடு. வேண்டிய பாத்திரங்களையும், அதற்கு வலு சேர்க்கும் நிகழ்வுகளையும் சேர்த்துக் கொண்டு அந்த நேர்க்கோட்டில் பயணிப்பதே பாலாவின் ‘நாச்சியார்.’
பாலாவின் சிறு பாத்திர உருவாக்கங்களே அழுத்தமாக இருக்கும் எனும் போது, முக்கிய பாத்திரமான நாச்சியார் பற்றி சொல்லவும் வேணுமா! ஜோதிகா இனி தன் வாழ்வு முழுவதும் சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரமவருக்கு. அசத்துகிறார்.
பாலாவின் நாயகன்கள் என்றாலே வித்தியாசமான சிகை, பரட்டை அல்லது செம்பட்டை கொண்டிருப்பார்கள் என்ற இலக்கணப்படி வரும் ஜி வி ப்ரகாஷ்குமாருக்கு நடிக்கும் படலம் இந்தப் படத்தில். நன்றாகச் செய்திருக்கிறார்.
‘அரசி’ பாத்திரத்தில் வரும் புதுமுகம் அருமை. கண்கள் மூக்கு முகம் என எல்லாமே பேசுகிறது இந்தப் பெண்ணிற்கு.
உச்சகாட்சியும், அதில் கலந்து வரும் இளையராஜாவின் சில நொடி இசையும் அருமை.
சிறிய படம் என்றாலும் கூட பல இடங்களில் தளர்வாகவே ஓடுவது, அவ்வளவு பெரிய ஆளின் ‘அதை’ அறுத்து தண்டனை கொடுத்தவரை அப்படியே விட்டுவிடுவார்களா போல குறைகள் நிறைய உண்டு. வழக்கமான பாலா பெரும்பாலும் இல்லை.
வீ – டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘நாச்சியார்’ : முரட்டுமென்மை – நல்ல பதிவு, எல்லோருக்கும் பிடிக்குமா என்பது கேள்வியே!
: திரைவிமர்சனம் – பரமன் பச்சைமுத்து
Facebook.com/ParamanPage