மயிலுக்குப் போர்வை தந்த பேகனின் குடி…

‘என்னது, பழநி அறுபடை வீடு பட்டியல்லயே இல்லையா? என்ன சொல்றீங்க பரமன்?’

முல்லைக்குத் தேர் கொடுத்த பரம்பின் பாரி போல, மயிலுக்கு போர்வை தந்தவன் பொதினியின் வையாவி கோப்பெரும் பேகன். நாம் பாடங்களிலும் சங்க இலக்கியங்களும் படித்த கடையேழு வள்ளல்களில் ஒருவனான இந்த பேகனின் குடி ஆவியர்குடி. இவர்களது பெயராலேயே இந்த பகுதியின் (ஊர்) பெயர் ஆவினன்குடி என்றழைக்கப்படலானது.

இந்தப் பகுதியின் எல்லையிலிருந்த மலை பொதினி மலை. பொதினி மலை பெயர் மருவி பழநி என்றானதாம்.
(‘பழம்…நீ…. பழநீ… பழம்நீயப்பா!’ எல்லாம் திருவிளையாடல் படத்திற்காகவும், கவிஞர்கள் தங்கள் சொல் விளையாட்டிற்காகவும் எழுதியது போல)

வீடுபேறு பெறுவதற்கு வீடு பேறு பெற்றவன் வழிநடத்துவதற்கும்,
முருகனை ஆற்றுப்படுத்தியும் பாடல் செய்த மதுரையை சேர்ந்த சங்கப் புலவர் நக்கீரர், அந்த சங்கத் தமிழ் நூலான ‘திருமுருகாற்றுப்படை’யில் அறுபடை வீடுகளை குறிப்பிடுகையில் பழநி மலை முருகனைப் பற்றி குறிப்பிடவில்லை.

தனது அறுபடை வீடு ஆற்றுப்படுத்துதலில் நக்கீரர் குறிப்பிடுவது திருவாவினன் குடி மயில் மேல் அமர்ந்த முருகனை, வள்ளியோடு சேர்ந்து காட்சி தந்ததாக குறிப்பிடுகிறார் ( ‘முருகன் மடந்தையோடு வீற்றிருத்தல்’ // ‘தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்… ‘ //

//’ஆவினன்குடி அசைதலும் உரியன், அதான்று…’ // )

அறுபடை ஆற்றுப்படுத்துதல் எல்லாம் வரிசைப்படுத்தப்பட்ட பின்பு பல காலம் கழித்து சித்தர் போகர் அமைத்தது பொதினி மலை (பழநி) நவபாஷான முருகன் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
( ‘ம்க்கூம், அந்த செலையைத்தான் தூக்கிட்டு வேற செலையை வச்சீட்டாங்களே!’ என்கிறார்கள் சிலர். ‘நவபாஷான சிலையை சுரண்டி சுரண்டி எடுத்துவிட்டார்கள்’ என்கிறார் சுகி சிவம்)

அறுபடை வீடு தரிசனம் செய்யப் போகிறவர்கள் நிச்சயம் மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமியை தரிசிக்கவும். அப்படியே கூட்டம் மிகு பழநி மலை தண்டாயுதபாணியையும் வணங்கலாம். பஞ்சாமிர்தம் கொள்ளலாம்.

திருமுறை பாடும் போது, கோவில்களில், வீட்டில் என பெரும்பாலும் கற்பூர தீபம் காட்டும் போது பலராலும் பல இடங்களிலும் பாடப்படும் சொல்லப்படும் அருணகிரிநாதரின் ‘நாத விந்து கலாதி் நமோ நமோ’ திருப்புகழ் திருவாவினன் குடியை குறித்த பாடலே. ‘ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே’ என்றே முடித்திருப்பார் பாடலை.

பழநி மலையிலிருந்து கீழே இறங்கும் இடத்தில் ‘மூன்றாம் படை வீடு திரு ஆவினன் குடி 1 கிமீ’ என்று தமிழக அரசே ஒரு திசைப் பலகையை வைத்து இதை தெளிவுபடுத்தியிருக்கிறது.

பழநிமலை முருகன் மீதும் பல பாடல்களைத் தந்துள்ளார் திருப்புகழில் அருணகிரிநாதர். பழநி மலை பிரதான கோவிலை 7 ஆம் நூற்றாண்டில் சேரமான் பெருமாள் கட்டியுள்ளார், தினசரி படையலுக்கான மானியமும் தந்துள்ளார். விஜயநகரப் பேரரசின் மன்னர்களும் நாயக்க மன்னர்களும் பழநி கோவிலுக்கு நிறைய செய்து பாதுகாத்திருக்கிறார்கள். முருகன் சன்னிதிக்கு வெளியே சேரமான் பெருமாள் குதிரோயோடு இருக்கும் சிற்பமே வைத்துவிட்டார்கள். பழநி மலையில்தான் போகர் ஜீவசமாதி உள்ளது.

இரண்டு கோவில்களிலும் ஹை எனர்ஜிதான், போய் வாருங்கள்.

மலை மீது ஏற கம்பி வட ரயில், கம்பி வட மகிழுந்து என வசதிகளை செய்திருக்கிறது அரசு. என்ன வசதிகள் இருந்தும் இந்த ‘வின்ச்’சிற்காகவும் ‘ரோப் கார்’ருக்காகவும் காத்திருக்கும் வரிசை மணிக்கணக்கில் நீளுகிறதுதான். கடகடவென செங்குத்துப்பாதையிலோ, கொஞ்சம் வசதியான யானைப் பாதையிலோ நடந்து ஏறிவிடுவதுதான் சிறந்தது.

‘அம்மா, கீழ இருக்கற இதுதான் அறுபடையில இருக்கறது’

‘நீ ரெண்டரை வயசா இருக்கறப்ப வந்தேன் பழநிக்கு, அதுக்கப்புறம் துருவன் மொட்டை போடற வரைக்கும் நெறைய தடவ வந்துட்டேன் தம்பீ. ஆனா, இந்த ஆவினன்குடிக்கு வந்ததில்லை தம்பீ!’

‘இப்பதான் கூப்பிட்டுருக்கான்!’

: அம்மா – ஆலய தரிசனம் – அறுபடை வீடு

-பரமன் பச்சைமுத்து
திருவாவினன்குடி, பழநி
17.06.2025

#ParamanTouring #பரமன்பச்சைமுத்து #amirthampachaimuthu #ParamanPachaimuthu #arupadaiveedu #travel #ParamanLifeCoach #Palani #Pazhani #Thiruvavinankudi #திருவாவினன்குடி #பழநி #lordmurugan #திருப்புகழ் #Thirupugazh

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *