குன்றுதோறாடல் போயிருக்கிறீர்களா?

குன்றுதோறாடல் – போயிருக்கிறீர்களா,கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

உருவ வழிபாடு கூடாது, மதச் சின்னங்கள் கூடாது, சோதியையே வணங்க வேண்டும் என்றெல்லாம் சொன்ன வள்ளலார் இளம்வயதில் தியானத்தில் இருந்த போது காட்சி தந்ததாக சொல்லப்படுவது எந்த கடவுளர் தெரியுமா?

முருகனுக்கு திருமணம் எங்கே நடந்தது?

ஒன்றுமில்லாத குட்டியூண்டு தெருமுனை முருகன் கோவில்களிலெல்லாம் சூரசம்ஹாரம் நடத்தும் போது, ஒரு பெரிய கோவில் அதுவும் அறுபடை கோவில் ஒன்றில் சூரசம்ஹாரம் நடத்துவதேயில்லை தெரியுமா?

….

திணை புறத்து நம்பிராஜனின் மகள் வள்ளியை காதலித்து, அவள் குலத்தின் எதிர்ப்பை எதிர்த்து சமர் புரிந்து, பின் சம்மதம் பெற்று மணம் புரிந்து கொண்டது குன்றுதோறாடலில் என்கிறது கந்தபுராணம்.

முருகனின் அறுபடையை பட்டியலிட்டு ஆற்றுப்படுத்திய மதுரை நக்கீரர்தான் இந்த இடத்தின் பெயரை ‘குன்றுதோறாடல்’ என்றும், இங்கே முருகன் உறைகிறான் என்றும் அடித்துச் சொல்கிறார்.

ஒரு பக்கம் வெண்மையான ‘பச்சரிசி மலை’, இன்னொரு பக்கம் கருமையான ‘புண்ணாக்கு மலை’, இவை இரண்டுக்கும் இடையே நல்ல உயரத்தில் உள்ளது முருகன் உறையும் என்று குறிக்கப்பட்டுள்ள குன்றுதோறாடல்.

போரின் போது உருவான சீற்றம், சினம் போன்ற பெரு உணர்ச்சிகளோடு முருகன் இந்தக் குன்றில் நின்று தணித்துக் கொண்டாடாம். சினம் தணிந்த இடமென்பதால் இதற்கு ‘தணிகை’ ‘திருத்தணிகை’ என்ற பெயரும் வந்தது. திருத்தணிகை மருவி வழக்கில் திருத்தணி என்றாகிவிட்டது. தணிந்த இடமென்பதால் இங்கே சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப்படுவதே இல்லை.

சங்கீத வித்வான்கள் போற்றும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் போற்றிய கடவுள் திருத்தணி சுப்ரமணியசாமிதான். திருத்தணியில்தான் அவருக்கு அருள் கிடைத்து பாடும் வல்லமை வந்தது என்கிறது அவரைப்பற்றிய வரலாற்றுத் தரவுகள், அவரது முதல் பாடலையும் குறிப்பிட்டு.

வள்ளலார் எனப்பட்ட ராமலிங்க அடிகள் தன் வீட்டு கண்ணாடியில் காட்சி கொடுத்து அனுபவம் கொடுத்தார் திருத்தணிகை முருகன் என்று ஐந்தாம் திருமுறையான திருவருட்பாவில் குறிப்பிடுகிறார். // ‘சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்… தணிகாசலம் என் கண்ணுற்றதே’// – திருவருட்பா

வள்ளியை மணந்தது, சினம் தணிந்தது, அருள் நிறைந்தது என பல காரணங்களால் ‘சரவண பவன்’ அண்ணாச்சி மட்டுமல்ல, முருக பக்தர்கள் அனைவரும் திருத்தணிகையை ஒரு படி உயர்த்தியே பிடிக்கின்றனர்.

சோழர்களால் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, இல்லையில்லை அதற்கு முன்பே பல்லவர்களால் கட்டப்பட்டது, பின்பு சோழர்கள் பெரும் திருப்பணிகள் செய்தார்கள் என்று இருவேறு கருத்துக்கள் உண்டு. ஆனால் இன்று திருத்தணிகை கோவில் காப்பாற்றப்பட்டு சிறப்புற்று இருப்பதற்குக் காரணம் விஜயநகர மன்னர்களும் உள்ளூர் நிலக்கிழார்களும்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆராய்ச்சியாளர்களிடம்.

அருணகிரிநாதர் வராத முருகன் கோவிலா, அறுபடை வீடா? வந்து புகழ்ந்து புகழ்ந்து ‘அழகிய திருத்தணிகை’ என்று திருப்புகழ் செய்துள்ளார்.

365 படிகள் ஏறி செல்வோர் பலரும் உண்டு, நேராக கோயிலுக்கே காரில் செல்பவர்களும் உண்டு. அம்மாவுடன் நாம் காரிலேயே மேலே சென்றோம்.

‘அம்மா, இதோடு ஆறுபடை வீட்டையும் பார்த்தாச்சி! இந்தக் கோவில் எப்படி இருக்கு?’

‘வள்ளிக்கும் தெய்வயானைக்கும் தனித்தனி சன்னதி இருக்கு. நல்லா தரிசனம் பண்ணேன். ரொம்ப மகிழ்ச்சிப்பா!’

தெய்வயானையைத் திருமணம் புரிந்தது திருப்பரங்குன்றத்தில். வள்ளியை திருமணம் செய்தது திருத்தணிகையில். அந்த பாட்டுல என்ன சொல்கிறார்கள், உங்களுக்காவது புரிகிறதா?

‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்!’

(நிறைவு பெற்றது)

:அம்மா – ஆலய தரிசனம் – அறுபடை வீடு

-பரமன் பச்சைமுத்து
திருத்தணிகை
21.06.2025

#ParamanTouring #பரமன்பச்சைமுத்து #amirthampachaimuthu #ParamanPachaimuthu #arupadaiveedu #travel #ParamanLifeCoach #Thirthani #Tiruthani #திருத்தணிகை #குன்றுதோறாடல் #திருத்தணி #lordmurugan #திருப்புகழ் #Thirupugazh

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *