திருவேரகம் : மனுஷன் கட்டி உருவாக்கின மலையா இது!?

‘என்னாதூ பரமன், மனுஷன் கட்டி உருவாக்கின மலையா இது? இது ஒரு மலைன்னு நெனச்சிட்டு இருக்கேன் இத்தனை வருஷமா? எவ்வளோ தடவ இங்க இந்த கோவிலுக்கு வந்துருக்கேன், தெரியலையே!’

மலைகளே இல்லாத சோழ தஞ்சைப்பகுதில் ஒரேயொரு மலைக்குன்று மட்டும் எப்படி வந்தது?

திருவேரகம் போயிருக்கிறீர்களா? கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எவனாயிருந்தாலும் சிவனாயிருந்தாலும் ஆசிரியனுக்கு பணிவு முறைமை தரவேண்டும் என்று உணர்த்திய இடம்.

…….

ஐந்து ஆறுகள் பாய்ந்து செழுமை செய்யும் தஞ்சைப் பகுதி மலைகளற்ற ஒரு நெற்கல சமவெளி (காவிரி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி என ஐந்து ஆறுகள். அதனாலேயே ஒரு தலத்தின் பெயர் ‘ஐயாறு’ எனப்படும் திருவையாறு, அங்கிருக்கும் ஈசன் ஐயாறப்பன்). ‘திருவேரகம்’ இந்தப் பகுதியில் இருக்கும் ஒரு கௌமாரகத் தலம்.

திருவேரகம் இருக்கும் மலை இயற்கையால் உருவான மலை அல்ல, பெரும் பாறைகளை கொண்டு வந்து சேர்த்து கட்டி உருவாக்கப்பட்ட ‘கட்டு மலை’ (‘கட்டுமலை’ என்ற பொருளடர்ந்த அழகான சொல்லைத் தந்திருக்கிறார்கள் பாருங்கள்!). 60 அடி உயரம் கொண்ட மலை. ஒரு அடிக்கு ஒரு படி என்ற விகிதத்தில் படிகள் அமைத்திருக்கிறார்கள். ‘தமிழ் மாதங்களின் எண்ணிக்கை 60, அதனால் 60 படிகள்!’ என்று ஜல்லியடிப்பவர்களும் உண்டு. அடிவாரத்திலிருந்தே தொடங்குகிறது கோவில்.

இரண்டாம் நூற்றாண்டிலேயே இருந்தது இந்தக் கோவில் என்கின்றன தரவுகள் (கிட்டத்தட்ட 1925 ஆண்டுகளுக்கு முன்பே). பரந்தாகச் சோழன் இந்தக் கோவிலுக்கு கட்டுமானங்கள் செய்து நிறைய திருப்பணிகள் செய்தான் என்கிறது வரலாறு (பராந்தகன் கிபி 907-955, அப்படியானால் இன்று 2025லிருந்து தோராயமாக 1070 ஆண்டுகளுக்கு முன்னால் திருப்பணிகள் செய்தான்)

(பராந்தக சோழன் ஒரு ‘இன்டரஸ்டிங் கேரக்டர்’. முதலாம் பராந்தகன் என்று மகுடம் சூட்டிக்கொண்ட இவனது இயற்பெயர் வீர நாராயணன். ஆமாம், இவர் பெயரில் இவரது பிள்ளை ராஜாத்திய சோழனால் வெட்டப்பட்டதுதான் எங்கள் வயலுக்குத் தண்ணீர் தரும், சென்னைக்குத் தண்ணீர் தரும் ‘வீராணம்’ எனப்படும் வீர நாராயணன் ஏரி. எங்களூர் சிதம்பரம் கோவிலுக்கு பொற்கூரை வேய்ந்தவனும் இந்த பராந்தகனே. ஒரு பக்கம் மதுரைக்கு போய் பாண்டியர்களையே வென்று மதுரையை பிடித்தாலும், மறுபக்கம் கோவில் திருப்பணிகளில் அதிகம் கரைந்தான். அதனால்தான் அவரது ஒரு பிள்ளையான கண்டராதித்யர் அப்படி சிவபக்தியிலேயே போய்விட்டார் போல. அப்படி அவர் போகவில்லையென்றால் ‘பொன்னியின் செல்வன்’ கதையே வந்திருக்காதே!)

திருவேரகத்திற்கு நக்கீரர் வந்து வழிபட்டுஆற்றுப்படை பாடியிருக்கிறார், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் இது.

அறுபடை வீடுகளிலேயே ஆளுயர பெரிய ‘ஸ்டைல்’லான முருகன் இங்குதான் உண்டு.

‘பரமன், ஏன் ஸ்டைல்ன்னு சொல்றீங்க?’

‘உச்சிக் குடுமி, ஒரு கையை இடுப்புக்குக் கொஞ்சம் கீழ தொடையில் வச்சிகிட்டு ஃபோட்டோவுக்கு போஸ் குடுக்கற மாதிரி ஸ்டைலா நிக்கறது இங்கதான்’

மயில் மீதல்ல, லிங்க பீடத்தின் மீது ஏறி நிற்கிறார். நெய்வேலியை அடுத்த ‘வேலுடையான்பட்டு’ கோவிலில் வித்தியாசமாக வில்லேந்தி முருகன் இருப்பதைப் போல, இங்கு முருகனுக்கு எதிராக மயில் இல்லை, யானை நிற்கிறது. (போகும் போது கவனிக்கவும்)

கும்பகோணத்தையடுத்து இருக்கிறது அறுபடை வீடான திருவேரகம்.

ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை சுவாமி (சிவன்) சுப்பையனிடம் (முருகன்) போதனை பெற்று திருவிளையாடல் நிகழ்த்திய இடம் இது என்று சொல்லப்படுகிறது (சுவாமிநாதன் – பெயர்க்காரணம்).

‘அம்மா, அறுபடை வீடு்கள்லயே நீ பார்த்ததுலயே பெரிய முருகன் எதும்மா?’

‘இதுதான். நல்ல ஒசரமா, பெருசா இருக்காரு!’

….

திருவேரகத்திற்கு இன்னொரு பெயர் இருக்கிறது, இன்று வழக்கில் இருக்கும் பெயர்…

‘சுவாமிமலை!’

: அம்மா – ஆலய தரிசனம் – அறுபடை வீடு

-பரமன் பச்சைமுத்து
சுவாமிமலை,
18.06.2025

#ParamanTouring #பரமன்பச்சைமுத்து #amirthampachaimuthu #ParamanPachaimuthu #arupadaiveedu #travel #ParamanLifeCoach #swamimalai #Thiruveragam #சுவாமிமலை #திருவேரகம் #lordmurugan #திருப்புகழ் #Thirupugazh #Paranthakachozhan #Chola

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *