சோலைமலை இளவரசன்…

மதுரையிலிருந்து பயணித்த ஔவையார் பயணக்களைப்பிலும் பசியிலும் வாடி மரங்களடர்ந்த ஒரு சோலையை நாட, அங்கே…

நிற்க.

ஔவையார் என்பவர் ஒருவரல்ல, ஆத்திச்சூடி பாடியது 12 ஆம் நூற்றாண்டின் ஔவை, விநாயகர் அகவல் பாடியது 14 ஆம் நூற்றாண்டின் ஔவை, அதியமானிடம் நெல்லிக் கனி பெற்றது பண்டைத் தமிழ் ஔவை என வேறு வேறு காலகட்டங்களில் தமிழ் மண்ணில் வேறுவேறு ஔவைகள் இருந்திருக்கிறார்கள் என்கிறது இன்றைய ஆராய்ச்சித் தரவுகள்.

ஔவையார் முதலில் கூன் விழுந்த மூதாட்டியே அல்ல, பாணர் குலத்தின் பெண் மகள், ‘பாணன்’ என்பதன் பெண்பால் வழக்காக ‘பாட்டி’ என்று என்று விளிக்கப்பட்டது என்கிறது ஓர் ஆராய்ச்சிக் குறிப்பு (‘பாணன்’ என்பதன் பெண்பால் பெயர்ச்சொல் ‘பாடிணி’ என்று வைரமுத்து ஆற்றிய உரை நினைவுக்கு வருகிறது). ஔவை கள் உண்டவள், நிலம் நெடுக பயணித்தவள் என்கிறது ஆராய்ச்சிகள்.

‘பரமன், அப்ப முருகன் ‘சுட்ட பழம் வேணுமா, சுடாத பழம் வேணுமா?’ன்னு கேட்டது எந்த ஔவை?’ என்கிறீர்களா?

இதிலோர் ஔவையாகவும் இருக்கலாம். ‘கருங்காலி கட்டைக்கு நானோக் கோடாலி’ என்று வரும் ஒரு பாடலில் ‘காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றேன் ஈரிரவும் துஞ்சாதென் கண்’ என்று வரிகள் இயற்றியுள்ளார். நாவல் பழம் கேட்டு மாடு மேய்ப்பவனிடம் தோற்ற சம்பவத்தை குறிப்பது போலவே உள்ளது, எனவே உண்மையாகவும் இருக்கலாம், அல்லது ‘பெர்னாட்ஷாவுக்கே ஆங்கில விளக்கம் தந்து சொல்லித் தந்தார் அண்ணா!’ என்று கதையைக் கட்டி காலங்காலமாக கடத்தப்பட்டதைப் போல புனைவாகவும் இருக்கலாம்.

நாம் தொடங்கிய ஔவையார் பயணக்களைப்பு கதைக்கு வருவோம்.

மதுரையிலிருந்து பயணித்த ஔவையார் பயணக்களைப்பிலும் பசியிலும் வாடி மரங்களடர்ந்த ஒரு சோலையை நாட, அங்கே மாடு மேய்க்கும் சிறுவனொருவன் நாவல் மரத்தின் மீது அமர்ந்திருப்பதைக் கண்டார்.

‘தம்பீ! கொஞ்சம் நாவல் பழங்களைப் பறித்து தாயேன் பசியாறிக் கொள்ள!’

‘பழமா? சுட்ட பழமா, சுடாத பழமா?’

‘பழத்தில் ஏதப்பா சுட்ட பழம், சுடாத பழமெல்லாம். சரி, சுடாத பழமே தாயேன்!’

மரத்தின் கிளைகளில் ஏறி நின்று உலுக்கினான் சிறுவன். மரம் உலுங்கி, பழங்கள் உதிர்ந்து கீழே மண்ணில் விழுந்தன.

ஓடிச் சென்று ஒரு பழத்தையெடுத்த ஔவை, அதில் ஒட்டியிருக்கும் மண்ணை நீக்கி, உதடு குவித்து ‘ஃப்பூ’ என்று ஊதினாள்.

‘என்ன பழம் சுடுதா? ஊதி ஊதி சாப்படறீங்க?’ என்றான் சிறுவன்.

‘பரமன், அந்தப் பையனா வர்றது முருகன், இது திருவிளையாடல் திரைப்படத்துக் காலத்துலேருந்து கேட்டுட்டு வர்ற கதைதான். இப்ப எதுக்கு அந்தக் கதை இங்கே?’

ஔவையின் மதுரைப் பயணத்தில் நிகழ்ந்ததாக சொல்லப்பட்ட அந்த சம்பவம் நிகழ்ந்ததாக சொல்லப்படும் இடமான சோலைமலையில் நிற்கிறேன் அம்மாவோடு.

குறிஞ்சியும் முல்லையும் கலந்த திணையாக குளுகுளுவென்று இருக்கும் சோலைமலைதான் அறுபடை வீடுகளிலேயே அழகானது என்பது என் எண்ணம்.

எந்தப் பரபரப்புமின்றி அமைதியாக இருக்கிறது காடு சூழ் அமைப்பு கொண்ட கோவில். எந்த செல்ஃபோன் டவரும் இல்லாததால் எந்த நெட்வொர்க்கும் கிடைப்பதில்லை என்பது கூடுதல் அமைதிக்கு உத்தரவாதம்.

உங்களுக்குப் பிடிக்கும்.

சோலை மலையா, சோலை மலையில் முருகன் ஆலயமா? அது எங்கிருக்கிறது?

சோலைமலைக்கு இன்னொரு பெயர் இருக்கிறது….

பழமுதிர்ச்சோலை!

: அம்மா – ஆலய தரிசனம் – அறுபடை வீடு

-பரமன் பச்சைமுத்து
பழமுதிர்ச்சோலை
17.06.2025

#ParamanTouring #பரமன்பச்சைமுத்து #amirthampachaimuthu #ParamanPachaimuthu #arupadaiveedu #travel #ParamanLifeCoach #Pazhamuthircholai #lordmurugan #திருப்புகழ் #Thirupugazh #பழமுதிர்ச்சோலை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *