சௌந்தர்யா: பரமன் கொஞ்ச நாட்களாக நீங்கள் படம் எதுவும் பார்க்கவில்லையா? விமர்சனமே வரவில்லை, அதான் கேட்கிறேன்.
பரமன்: ஒரு மலையாளப் படம், ஒரு இந்திப் படம், ஒரு பழைய தெலுங்குப் படம் பார்த்தேன்.
1. மலையாளம்:
அதிகாலையிலேயே எருமை மாட்டை வெட்டி இறைச்சி விற்கும் வர்கீஸ், அவன் தரும் இறைச்சியை தினமும் வாங்கியே பழகிவிட்ட ஊர், ஓர் அதிகாலை வர்கீஸின் ஊழியன் ஆன்ட்டனி வெட்டும் போது வெட்டுப்பட்டு ஆனால் மிரண்டு திமிறி கயிற்றை அறுத்துக் கொண்டு தப்பியோடிவிருகிறது எருமை. மிரண்டு கிலியும் மூர்க்கமும் பிடித்த எருமை ஊரை துவைத்து துவம்சம் செய்கிறது. காடு சூழ் ஊரில் ஒரு பக்கம் எருமையைப் பிடிக்க முயற்சிக்கும் ஊர் மறுபக்கம் ஓடிக்கொண்டேயிருக்கும் கண்ணில் படா எருமை என களேபரங்களை கட்டி செய்துள்ள படம் ‘ஜல்லிக்கட்டு’. நாவலாக எழுதி படமாக மாற்றியிருக்கிறார்கள். முடிவு மட்டும் நாடகத்தனம். வித்தியாச கதைக்களன்.
2. பழையத் தெலுங்குப் படம் :
மகேஷ்பாபு தலை முடி அறுவை சிகிச்சையெல்லாம் செய்து கொள்வதற்கு வெகுகாலம் முன்பு வந்த படம் ‘அத்தடு’. இன்றைய காலகட்டத்தில் சில சீன்கள் ‘ஐய’ என்று ஏளன சிரிப்பை வரவைத்தாலும், பல இடங்களில் கரம் மசாலா. பார்த்தே ஆக வேண்டுமென்று இல்லை.
3. இந்திப்படம்:
அலாவுதீன் கில்ஜி – சித்தூர் ராஜபுதன அரசின் சிற்றரசியார் பத்வமாவதி அவர்களைச் சுற்றிய வரலாற்றை வைத்து சஞ்சய் லீலா பன்சாலி தந்துள்ள அட்டகாசமான படம் ‘பத்மாவதி’. தமிழ் / தெலுங்கு மொழி குரலாக்கத்தோடு கூட அமேசான் பிரைம்மில் கிடைக்கிறது.
வரலாற்றுப் படங்கள் விரும்பிவோர் நிச்சயம் பார்க்கலாம்.
வாழ்க! வளர்க!
– பரமன் பச்சைமுத்து
சென்னை
27.05.2020