வானகச் சிறுவர்கள் சிலர் ஊரளவு பெரிய சல்லடையொன்றின் மீது வாய்க்காலின் மதகைத் திறந்து நீரை விட்டது போல பெய்து கொண்டேயிருந்தது மழை.
அதிகாலை மூன்றுக்கு வெட்டிய தொடர் மின்னல்களின் வெளிச்சமும் இடித்த பேரிடிகளும் அப்போதிலிருந்து காலை ஏழு வரை அடித்த மழையும் மிரள வைத்தன.
வானியலாளர்கள் கணித்த படி வட கிழக்குப் பருவமழை தொடங்கி விட்டது
நகரங்களின் தெருக்களில் குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு கட்டாய அமல் என்ற முறை நல்லதை செய்யும் என்று மகிழ்ச்சி வரும் அதே வேளையில் ‘ஆறுகளை குளங்களை தூர் வாரியதோடு முடித்துக் கொண்டார்கள். நீர்ப்பாதையை அடைத்துள்ள ஆக்ரமிப்புகளை நீக்க வில்லை. பெருமழை பெய்தால் கஷ்டம்தான்!’ என்று ஊடகங்கள் எழுதியதும் நினைவில் வரவே செய்கிறது.
பெருநகரில் மூன்றரை மணி நேரத்திற்கு பெருமழை பெய்திருக்கிறது. இதன் விளைவுகளைப் பார்ப்போம்.
வடகிழக்குப் பரும மழை, ஆளும் மாநில அரசிற்கான பரிட்சையாக மக்கள் முன் நிற்கப்போகிறது. ஆளும் அரசிற்கான நிர்வாக வெற்றியா, எதிர்கட்சிகளுக்கான வாய்ப்பா என்பது அடுத்த இரு வாரங்களில் தெரியும்.
சென்ற ஆண்டை விட குறைவான மழையே பொழியும் என்கிறது கணிப்பு முடிவு. நமக்கு மழை வேண்டும். நன்றாகப் பெய்யட்டும்.
நன்னீர் கொசுக்களின் மூலம் பெருகும் நோய், மழைக்கால நோய்களிலிருந்து நம்மை காப்போம்.
பெய்யட்டும் மழை!
வாழ்க!
- பரமன் பச்சைமுத்து
29.10.2020