ஒரு புறம் மார்கழித் திருவாதிரை தில்லை நடராசர் உற்சவத்திற்கு கோவில் தயாராகிறது. அதற்கு முந்தைய நாள் நடராஜர் தேரை இயக்குவதற்கு கொரோனாவைக் காரணம் சொல்லி அனுமதி மறுக்கப் படுகிறது. வடம் பிடித்து இழுப்பதில் தொற்று வந்துவிடும் எனக்கூறி என்எல்சி பொறியாளர்களை வைத்து தேரை இயந்திரங்கள் மூலம் இழுக்க வைக்க முடியுமா என்று மதிப்பீடு செய்வதாக தகவல் வருகிறது.
மறுபுறம் முதல்வர் அவர்கள் இன்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடக்கி விட்டார் என்று படத்தோடு செய்திகள் வருகின்றன. படத்தின் அவரது பின்னால் நிற்கும் கூட்டத்தைப் பார்த்தால் தில்லை நடராசரின் தேரை இழுக்கும் பக்தர்களை விட அதிகமாக இருக்கிறார்கள்.
அரசியல் கூட்டமென்றால் அனுமதி, கோவில் உற்சவம் என்றால் ஆய்வுக் கூட்டம் அனுமதியில்லை என்பது நிறைய கேள்விகளை எழுப்புகிறது.
தேர்ந்தெடுக்கப் பட்ட நபர்களை வைத்து, கையுறை, சுவாசக்கவசம், கிருமிநாசினி, பாதுகாப்பு நெறிமுறைகள் கொண்டு தில்லை நனராசரின் தேரை இழுக்கலாமே. கல்லூரிகள் திறந்தாயிற்று. தீபாவளிக்கே திரையரங்கம் திறந்தாயிற்று. பேருந்தில் எல்லா இருக்கைகளும் நிரப்பியாயிற்று. தில்லை நடராசர் தேர் மட்டும் நகரக் கூடாது தொற்று வந்து விடும் என்பது சரியாக இல்லையே!
திமுக தலைவர் ஸ்டாலினும் மற்ற கட்சிகளும் இதற்குக் குரல் தர வேண்டும். முதல்வரின் கவனத்திற்கு இது போக வேண்டும்.
தில்லை நடராசர் தேர் திருவீதியுலா வரட்டும். திருவருள் வேண்டும் பக்தர்கள் மனம் மகிழட்டும்.
வாழ்க! வளர்க!
– பரமன் பச்சைமுத்து
19.12.2020