பிறவி ஊமையாய் பிறந்தபோதும், பிறவி எடுத்ததே பெரும் நடிகனாக வேண்டும் என்பதற்காகவே என்றிருக்கும் இளைஞனொறுவனும், என் அடிக் குரலின் வசீகரம் அத்தனைபேரையும் கட்டிப் போடும் என்று இறுமாப்பில் இருக்குமோர் முதியவனும் ஒன்று சேர்ந்தால் என்னவாகும், பெயர், பணம், புகழ், இவற்றோடு போதையும் சேர்ந்தால் என்னவாகும் என்று போகும் (‘மைக் மோகன் – எஸ் என் சுரேந்தர்’ ரக) கதையை, தனுஷ் – அமிதாப் – அக்ஷரா – இளையராஜா – பி சி ஸ்ரீராம் என்றோர் அற்புதக் கலைஞர்கள் கூட்டத்தை வைத்துகொண்டு அசத்தலாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பால்கி.
ஒண்ணரைப் பக்கத்துக்கு பஞ்ச் டயலாக்ஸ் பேசும் ஹீரோக்களுக்கு மத்தியில் வெறும் உடல்மொழி மட்டுமே காட்டி உயர்ந்து நிற்கிறார் தனுஷ். தனுஷ் மீது மரியாதைக் கூடிப் போகிறது.
வயசானாலும் சிங்கம் சிங்கம்தான் என்று கிளின்ட் ஈஸ்ட்வுட்டுக்கு சொல்வதை, அடித்துத் தன் பக்கம் திருப்பி ‘நாங்கதான் எப்பவும் சிங்கம்!’ என்று கர்ஜிக்கிறார் நடிப்பில் உயரம் தொடும் அமிதாப் பச்சன்.
அக்ஷரா – முதல் படமாமே, அசத்துகிறார்.
தனுஷ் பேசும்போது, குரலைக் கேட்டு இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகி, ‘இந்தக் குரலை பாத்துக்கோ!’ என்று காதலோடு ரேகா சொல்வது அந்நாளைய அஃபயர் தெரிந்தோர் அதிரும் கிளிஷே. வெளிநாட்டில் பக்கத்து ரூமில் நடிகையோடு இருக்கும் தனுஷுக்கும், அமிதாப்பிற்கும் நடக்கும் டெக்ஸ்டிங் அதகளம்.
சில பல குறைகள், முன் கூட்டியே யூகிக்கும் படியான விஷயங்கள் இருந்தாலும், ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல நாவல் படித்த திருப்தி.
ராஜாவும், பி சி யும் வூடு கட்டி அடிக்கிறார்கள்.
ஷமிதாப் : வித்தியாசமான விருந்து. கண்டிப்பாய் பாருங்கள்.
: திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து | ParamanIn.com