மழை வெளுத்துக் கட்டியது.
நாகை மாவட்டத்தில் சிதம்பரம் காட்டு மன்னார்குடியில் நெற்பயிர்கள் மூழ்கின, வைத்தீஸ்வரன் கோயிலின் ஒரு பகுதியில் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது, சென்னைப் பெருநகரில் வேளச்சேரி, அம்பத்தூரில் சில பகுதிகளில் என சில இடங்களில் வீட்டுக்குள் நீர் புகுந்தது போன்றவை நிகழ்ந்துள்ளன. கோபாலபுரத்தில் கலைஞர் வீட்டிற்குள் நீர் புகுந்தது.
இந்த பாதிப்புக்களுக்கு மீட்பு நடவடிக்கை துரிதமாக எடுக்கப் பட வேண்டும். இந்த சங்கடங்களைத் தாண்டி பெரிய நல்ல செய்தியை இந்த மழை தந்திருக்கிறது.
கடந்த வாரம் வறண்டு கிடந்த சோழ தேசத்து வீராணமும் சென்னையின் புழலும் இன்று உயர்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது
( சென்னைக் குடிநீர் கொள்வோர் சில மாதங்கள் கொண்ட கசக்கும் குவாரித் தண்ணீர் பிரச்சினை இப்போதைக்கு இல்லை!)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிள்ளைப் பாக்கம், நந்திவரம், சோமங்கலம் உட்பட 98 ஏரிகள் முழுதும் நிரம்பின. மதுராந்தகம் உட்பட 500 ஏரிகள் 80% உயர்ந்துள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் 37 ஏரிகள் குளங்கள் நிரம்பியுள்ளன. 40க்கும் மேற்பட்டவை பாதியளவு நிரம்பியுள்ளன.
கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை பகுதிகளில் தடுப்பணைகள் நிரம்புகின்றன.
நன்றி மழையே!
– பரமன் பச்சைமுத்து
03.11.2017