கொங்கு மண்டலத்து காங்கேயம் காளைகள், கரூர் சேலத்து போர் மாடுகள், அந்தியூர் பகுதியின் பர்கூர் மலை மாடுகள், நாகை தஞ்சையின் உம்பளச்சேரி மோழை மாடுகள், தேனியின் தேனி மலை மாடு, தென் மதுரையின் பட்டி மாடு என வரிசையாய் கம்பீரமாக காளைகளும் பசுக்களும்,
கொங்குவின் கோயம்புத்தூர் ஆடு, மைலம்பாடி ஆடு, செங்கம் ஆடு, சேலத்தின் மேச்சேரி ஆடு, குறும்பை ஆடு, தலைச்சேரி ஆடு, வெள்ளாடு என வரிசையாய் ஆடுகளும்,
சிப்பிப்பாறை, கன்னி கோம்பை, ராஜபாளையம் என நாட்டு நாய்களும், கோழிகளும் ஒரே இடத்தில், கூடவே சில குதிரைகளும் குவிக்கப் பட்டால் பார்க்க எப்படி இருக்கும்? அதுவும் சென்னை நகரின் மையத்தில்!
ஓஎம்ஆர்ரில் ஒய்எம்சிஏ மைதானத்தில்தான் ( சரவண பவனுக்கு அருகில்) இவையெல்லாம். நம் பாரம்பரியத்தைப் பற்றிய அறிவு கொள்வோம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ‘செம்புலம்’ என்ற இரண்டு நாட்கள் கண்காட்சி நடக்கிறது. கூடவே பாரம்பரிய சிறுதானிய மற்றும் உணவு வகைகள், மாடித்தோட்ட – விவசாய – ஊக்கிகள் கடைகள்.
பறை இசையும் பண்பாட்டு வாத்தியங்களும் கூட இசைக்கப் படுகின்றன. அரை மணி நேரத்தில் மொத்தத்தையும் பார்த்து முடித்து விடலாம்.
வருமானம் என்ன வரும் என்று பார்க்காமல் பல ஊர்களிலிருந்து பாரம்பரியத்தை இழுத்து வந்து ஓரிடத்தில் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். மிக மிக நல்ல செயல்.
Facebook.com/ParamanPage