கும்மிடிப்பூண்டியில் இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வரவிற்கும் செலவிற்கும் இழுத்துப் பிடித்துக் கொண்டு அல்லாடும் ஒரு குடும்பத்தில், அதன் மைய ஆதாரமான தாய்க்கு உயிர்க்கொல்லியான நுரையீரல் புற்று நோய் வந்தால் என்னவாகும், எப்படி அதை எதிர்கொள்வார்கள் அவர்கள் என்பதை நகைச்சுவை தெளித்துத் திரையில் தருகிறார்கள்.
பயம், சோகம், தனிமை, அழுத்தம் என எதையும் தனியாகக் காட்டாமல், ஆனால் எல்லாமும் கலந்த ஒரு முகபாவத்தை மட்டும் படம் முழுவதிலும் காட்டிக்கொண்டு மொத்த படத்தையும் தூக்கி நிறுத்துகிறார் நயன்தாரா. நயன்தாராவிற்கு ஈடு கொடுத்து அவருடன் போட்டி போடுகிறது வசனம். ‘கடைக்கு வெளிய மீட் பண்ணாதான் இன்க்ரிமெண்ட்ன்னா, நான் அப்போ..’ என பல இடங்களில் சொல்லலாம். இடைவேளைக்கு முன்பு வரும் அந்த ‘போடுங்க சார் அவன. நான் திரும்பிக்கறேன்’ என்ற இடத்தில் தியேட்டர் அதிர்கிறது. கை தட்டுகிறார்கள். உண்மையில் படம் தொடங்குவது இடைவேளைக்கு சற்று முன்புதான்.
எஸ்.ஆர். சிவாஜி, சரண்யா, ஜாக்குலின், யோகிபாபு, அந்த ‘டோனி’, ‘பாய்’, சரவணன், மசாஜ் செய்துகொள்ளத் துடிக்கும் அவரது மனைவி, நான் கடவுள் ராஜேந்திரன் என எல்லாப் பாத்திரங்களும் சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
இடைவேளைக்கு முன்புதான் அசல் படம் தொடங்குகிறது என்றாலும், பின்பாதிக்குத் தேவையான பாத்திரங்களை நெருக்கடிகளை முன்பாதியில் வைத்து நகர்த்துகிறார்கள். அதற்குப் பிறகு படம் விரைகிறது.
வி – டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘கோலமாவு கோகிலா’ – நானும் ரௌடிதான் பொம்பள வெர்ஷன். நகரும் முதல் கொஞ்ச நேரத்தைப் பொறுத்துக்கொண்டால், ரசிப்பீர்கள். பார்க்கலாம்.
: திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து
Facebook.com/ParamanPage