தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே 100க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட விவசாயமும் கால்நடை வளர்ப்பும் முதன்மையாகக் கொண்ட ஒரு சிற்றூர் முதலிப்பட்டி.
வானம் பார்த்த பூமியான முதலிப்பட்டியில் 15 ஏக்கர் அளவுள்ள கண்மாய் இருந்தும், 8 ஏக்கர் துர்ந்து மேடாகி கருவேல மரங்களால் நிறைந்தும், மீதியுள்ள 7 ஏக்கர் சேறு
சகதியுமாகவும் ஆகிப் பயன்பாட்டிற்கு அருகதையற்றுப் போனதால், தூரத்திலிருந்த வைப்பாற்றில் ஆழ் துளைக் கிணறுகளமைத்து அதிலிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வந்தனர். அந்த நீரும் உவர்ப்பாக மாறவே தவித்தது கிராமம்.
ஒரு குடம் 10 ரூபாய்க்கு வாங்கித் தண்ணீருக்குத் தவித்த ஊரின் மகளிர் சுய உதவிக்குழு விளாத்திக்குளம் வேம்பு சக்தி இயக்கத்திடம் உதவி கேட்டது. ஊரே ஒன்று பட்டு நின்றதால் வேம்பு சத்தி இயக்கம் முழுதாய் இறங்கியது கைகோர்த்து.
15 ஏக்கர் கண்மாயையும் தூர்வாரி அழகாய் கரை எடுத்து, ஊரின் எல்லாக் காரை வீடுகளிலும் மழை நீர் சேகரிப்புத் தொட்டிக் கட்டி, காளியம்மன் கோவிலருகே ஆழ்துளை கிணறமைத்து நீர்த்தேக்கத் தொட்டியமைத்து நிமிர்த்தி விட்டார்கள். ஊரின் தண்ணீர்த்தேவையை தன்னிறைவில் தீர்த்துவிட்டார்கள். விவசாயத்தையும் கால்நடைகளையும் காப்பாற்றியதோடு நிலத்தடி நீர் கூட்டி மண்ணையும் வளப்படுத்தி விட்டார்கள்.
கண்மாயைச் சுற்றி மரக்கன்றுகள் நட பருவ மழைக்காக காத்திருக்கிறார்களாம் விளாத்திகுளத்தின் வேம்பு மக்கள் சக்தி இயக்கத்தினர் இப்போது.
முதலிப்பட்டி மக்களையும், விளாத்திக்குளம் வேம்பு சக்தி இயக்கத்தையும் எழுந்து நின்று பாராட்டுகிறோம்!
அவர்களுக்கு…
மலர்ச்சி வணக்கம்!
– பரமன் பச்சைமுத்து
சென்னை
13.09.2019
Facebook.com/ParamanPage