திருவண்ணாமலை மலர்ச்சி மாணவர்களுக்கு,
மன்னிக்கவும். இன்று மாலை உங்களுக்கு வளர்ச்சிப்பாதை வகுப்பு எடுத்திருக்க வேண்டும்.
சிவாகமப்படி மரபு செய்யும் வழக்கம் கொண்ட குடும்பத்தில் சிவலோக பதவி அடைந்தவரை நல்லடக்கம் செய்து விட்டு அடுத்த நாள் சமாதி பூசை செய்து விட்டால், அடுத்த வேலைகளில் ஈடுபடலாம். தீட்டு என்பதெல்லாம் இல்லை. என் பாட்டி இறந்து சிவாகம முறைப்படி நல்லடக்கம் செய்து அடுத்த நாள் சமாதி பூசை செய்து முடித்ததும் மாலையே புவனகிரியில் சுந்தர மாரியம்மன் கோவிலில் உள்ளே அமர்ந்து இறை பணிக் கச்சேரி செய்தவர் என் தந்தை.
அதே முறையில் திருவண்ணாமலை வந்து மலர்ச்சி மாணவர்களுக்கு வகுப்பெடுத்திருக்க வேண்டும் நான். உடல் நிலை சரியில்லாமல் தந்தை போராடிய அந்த ஒரு நாள் அதில் மூழ்கி, தி.மலை ஏற்பாடுகளை தவற விட்டுவிட்டேன்.
தந்தை இருந்திருந்தால், என் தலையில் தட்டி, ‘போ! எத்தனை பேருக்கு நல்லது நடக்கும், போய் எடுத்திட்டு வாடா சிவா!’ என்று என்னை அனுப்பி வைத்திருப்பார்.
வந்திருக்கவேண்டும் திருவண்ணாமலைக்கு. 60 மலர்ச்சி மாணவர்களுக்கும் 40+ அரும்புகளுக்கும் என 100+ மாணவர்களுக்கு நல்லது நடந்திருக்கும்.
தவற விட்டுவிட்டேன். வருந்துகிறேன்.
பேரன்புடன்,
பரமன் பச்சைமுத்து
கீழமணக்குடி
11.01.2020