சூர்ய நமஸ்காரம் போன்ற வயிற்றைப் பிழிந்து நிமிர்த்தும் சில ஆசனங்களை இரண்டு சுற்று செய்து முடிக்கும் போதே வயிறு கபகபவென்று பசிக்கும்.
வெறும் வயிற்றில் ஒரே மூச்சில்ல்லாமல் நிதானமாக ஒரு சிறு செம்புத் தண்ணீரை உறிஞ்சும் பழக்கம் கொண்டவன் நான். ஹெல்த் பாஸ்கட் நிறுவனரும், மலர்ச்சி மாணவருமான திருமதி சுதா கதிரவன் ‘வெறும் வயிற்றில் இதைக் காய்ச்சிக் குடிங்க!’ என்று அனுப்பி வைத்த ‘ஆன்ட்டி வைரஸ் டிரிங்க்’ இன்னும் தீவிரமாக இயங்கி விட்டது போல. நிலவேம்பு, அதிமதுரம், சுக்கு, திப்பிலி, வேம்பு என முக்கிய மூலிகைகள் கொண்ட சித்த மருந்து கலவையை பொடியாக்கி அட்டகாசமாக காற்று புகாமல் திரும்பவும் மூடும் வண்ணம் சேஷேவில் செய்திருந்தனர், ஒரு பாக்கெட்டில் 5 கப் பானம் செய்யலாம் என்ற குறிப்போடு. அதிகாலையிலேயே மகளிடம் கொடுத்து காய்ச்சச் சொன்னேன்.
வெறும் வயிற்றில் செய்தித்தாள்களை ஒரு மிடறு, ஹெல்த்பாஸ்கெட் பானம் ஒரு மிடறு என்று விழுங்க கசப்பு தொண்டையைக் கடந்து அடி வயிறு வரை பரவியது. வேள்பாரியின் அலவன் மனதில் வந்து போனான். கசப்பும் புளிப்பும் இயல்பாகவே பிடிக்குமெனக்கென்பதால் கிட்டத்தட்ட சப்புக் கொட்டி அருந்தினேன், அருகிலமர்ந்து அருந்திய மகள் நல்லதென்பதால் முயற்சி செய்து தொண்டையில் இறக்கிக் கொண்டிருந்தாள்.
ஔவைக்கு அதியமான் தந்ததைப் போல சுதாகதிரவன் அனுப்பியிருந்தார். கடைகளில் கிடைக்குமென நம்புகிறேன்.
உடற்பயிற்சி – மூச்சுப்பயிற்சி – மற்ற செய்தித்தாள்கள் என எல்லாமும் முடித்து குளிக்கப் போகையில் வயிறு பசியில் தவிக்கிறது.
ஏற்கனவே குளித்து உடைமாற்றி வந்து உட்கார்ந்து கொண்டிருக்கும் மகள் சொல்வது காதில் கேட்கிறது, ‘அம்மா… ரொம்பப் பசிக்குது!’
பசிப்பதும், பசி தீர்ப்பதும் நன்று.
நமக்கு பசிப்பது ஆரோக்கியம்,
அடுத்தவர் பசி போக்குவது நற்றொண்டு!
#SuryaNamaskaram
#BreathingPractices
#MalarchiMahaMudra
#HealthBasket
– பரமன் பச்சைமுத்து
ஆர் ஏ புரம்
22.03.2020