ஜெயமோகனோடு அதிக பரிச்சயமில்லை எனக்கு. பெங்களூர் வாழ் காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்திருக்கிறேன். மணக்குடியான் டாட் காம் தளத்தில் வந்திருந்த அப்போது வெளியான
‘நான் கடவுள்’ படத்தின் எனது விமர்சனத்தை தனது இணைய தளத்தில் அவர் இணைத்திருந்தது அப்போதைய பெரும் மகிழ்ச்சி எனக்கு அந்நாளில். ‘கடல்’ படத்தின் ஆரம்ப காட்சி வசனங்கள் (அர்விந்த் சாமி, சின்னப் பையன், டேப் ரெக்கார்டர் காட்சிகள்) என்னை ஈர்த்தன. அவ்வப்போது அவரை படிப்பதுண்டு.
ஒரு நாள் திடீரென என் சொந்த நூலகத்திலிருந்து ஒரு நூலை எடுத்துப் புரட்டியதில் நேசமணியைப் பற்றிய ஒரு நாடாரின் நிஜ வாழ்க்கைப் பற்றிய எழுத்து என்னை அதிர வைத்தது. ‘நேசமணி’யின் ஆளுமை மீது நேசம் வந்தது. ஒரு முறை அங்கே போய்வர வேண்டுமென தாகம் வந்தது.
இன்றுதான் அதற்கப்புறம் எடுத்தேன். சில வரிகளை கடக்க முடியவில்லை. நின்று போனேன். புத்தகத்தை மூடி வைத்தும், உள்ளே உணர்வுகள் ஏற்படுத்தும் வரிகள்.
‘அன்புக்குரிய பரமனுக்கு, எனக்குப் பிடித்த நூல், தங்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்’ என்று இந்த நூலை எப்போதோ அனுப்பி வைத்த ‘மலர்ச்சி மாணவர் – பொண்ணுஸ்வாமி’க்கும்,
அதே நூலை ஐந்து மாதங்களுக்குப் பின் அன்பு ததும்ப தந்த ‘மலர்ச்சி மாணவர் விஜய தீபன்’னுக்கும் நன்றி.
‘முதலில் ‘சோற்றுக்கணக்கு’ கட்டுரையை வாசிக்கவும் என்று பொண்ணுஸ்வாமி அனுப்பிய குறிப்பை நான் செயல்படுத்தவில்லை.
எழுத்துக்களைத் தாண்டி அது ஏற்படுத்தும் உணர்வுகள் எனக்குப் பிடிக்கும். அதைச் செய்யும் ஒரு நூல்.
அந்த நூல் – ‘அறம்’
அறம் தொடர்கிறது.
பரமன் பச்சைமுத்து
03.01.2016