எழுத்து என்பது எழுதுபவனின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வெளி வருவது. ஒரு அலைவரிசையில் ஒத்திசைவு பெற்று இருக்கும் போது, அதுவாக உருவெடுத்துக் கொண்டு எழுதுபவனின் உள்ளக்கிடக்கையில் காலங்காலமாகப் படிந்து கிடங்கும் படிமங்களை ஒட்டிக் கொண்டு வெளிவருகிறது.
பல நேரம் அதுவாக வரும், சில நேரங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் அது வருவதில்லை. நாளை காலைக்குள் இத்தனைப் பகுதிகள் முடித்தால்தான் வரைகலை வடிவம் பெற்று, பிழைத்திருத்தம் பார்த்து, அச்சுக்கு அனுப்பப்படும் என்ற நிலை சில நேரம் கயிற்றின் மேல் நடக்கும் வித்தைக்கு ஈடானது. (இதழின் ஆசிரியன் என்றால் கூடுதல் பொறுப்பு என்பது தனிக் கதை!).
சில நிமிடங்கள் முன்பு வரை எதைப்பற்றியெழுதுவது என்று தெரியாமல் வெற்றிடமான மனதோடு வேர்டு ப்ராசசரைத் திறந்து எதையோ எழுதத் தொடங்கியப் புள்ளியில் எங்கிருந்தோ மடமடவென வந்து கூடும் வரிகளைக் கண்டு அசந்து (‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு’ என்ற வகையில்) ‘மச்சீ… எப்படி எழுதறடா… கலக்கற!’ மகிழ்ந்து பிரமிக்கும் போதே… ‘நம்மால் இல்லை. நம் வழியே! இறைவா நன்றி!’ என்று கை கூப்பத் தோன்றுகிறது.
அக்டோபர் மாத ‘வளர்ச்சி’ இதழுக்கான எழுத்துப் பணி, வடிவமைப்பு நிறைவடைந்தது.
– பரமன் பச்சைமுத்து,
சென்னை
28.09.2018
Www.ParamanIn.com