தன்னுடன் இருப்பவனுக்கு பெயரும் புகழும் வருவது கண்டு பொறுக்காது, சூழ்ச்சிகள் பல செய்து, சூழ்நிலைகளைப் பயன்படுத்தி அவனை வெளியேறச் செய்யும் மேடை நடிகனின் கதை.
வெளியே ஊர் உலகத்திற்கு என்னதான் கதை சொல்லி நம்ப வைத்தாலும், உள்ளத்தினுள்ளே ஓர் நாள் உண்மை வந்து உறுத்தும் என்று முடிகிறது.
வெள்ளையர்களை வெளியேறச் செய்ய வேண்டுமென்ற விடுதலை வேட்கைத் தீ பற்றியெறியத் தொடங்கிய காலகட்டத்திய (கிட்டப்பா-கே.பி.சுந்தராம்பாள் காலம்) கதையை படமாய் எடுக்க துணிச்சல் வேண்டும்.
நாசர், சித்தார்த், தம்பி ராமையா என எல்லோரும் கொடுத்ததை செய்திருந்தாலும், ப்ரித்விராஜ் பிரமாதம்.
முழுப் படத்திலும் ஏ. ஆர். ரஹ்மான் நிறைந்திருக்கிறார். திருப்புகழ், யாருமில்லாத் தனியரங்கில், சண்டிக்குதிரை என அசத்தியிருக்கிறார் (ஆர்மோனியம் இல்லாக் கூத்துப் பாட்டுக்கள்!?)
‘காவியத் தலைவன்’ – வித்தியாசமான முயற்சி. ‘இருவர்’ ரக சினிமா. எனக்குப் பிடித்தது. எல்லோருக்கும் பிடிக்குமா என்பது தெரியவில்லை.
: பரமன் பச்சைமுத்து