எட்டு காக்கைகளோடும், ஓர் அணிலோடும் பகிரும் அனுபவமாய் அமைந்தது என் இன்றைய மதிய உணவு!
ஆறு மணிக்காக்கைகள் கீரைச்சோற்றையும், இரு அண்டங்காக்கைகள் தயிர் சோற்றையும், இவைகள் கொத்தி விட்ட மற்ற எல்லாவற்றையும் அணிலும் உண்டன.
என் தட்டைக் கழுவி, நீர் நிரப்பி வைத்ததும் ஒன்பது உயிர்களும் பருகின என்பது என் பரவசம். (மலர்ச்சி அலுவலகம் மேலே)
மிருகங்கள், பறவைகளுக்கு அவற்றின் இயல்புக்கு மாறான உணவு கொடுப்பதில் உடன்பாடில்லை என்றாலும் காக்கைகள் எதையும் உண்ணும் என்று எண்ணி பகிர்ந்தேன். கூடவே அணில் வந்து விட்டது, மூன்று கோடுகளை சுமந்து கொண்டு. அணிலின் இயல்பிற்கு இது சரியான உணவு இல்லைதான். (நகரத்து அணில் போஸ்டர் சாப்பிடும் பசு போல, பிரியாணி சாப்பிடும் அணிலாகவும் இருக்கலாம்!)
சோறே கிடைக்காத வறியவன் போலவும் அல்லாமல், சோற்றை தின்று தின்று மிதப்பேறி அலட்சியம் கொண்டவன் போலவும் அல்லாமல், இரண்டுக்கும் இடையில் இருப்பவனைப் போல கவனமாய் உண்டது அவ்வணில்.
இதில், நற்பலன்கள் இருந்தால் இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜயதீபனுக்கும், தீய பலன்கள் இருந்தால் எனக்கும் சேரட்டும்.
– பரமன் பச்சைமுத்து
27.04.2016