நாடகம் போடும், நிறைய எழுதும், சாமி கும்பிடுதல் என்ற ஒன்றே இல்லாத வாழ்வைக் கழித்த ஒரு முற்போக்கு எழுத்தாளன் முதுமைக்குள் நுழையும் போது அடி முதுகில் திருகு வலி வந்து நிற்க முடியாமல் நடக்க முடியாமல் படுக்க முடியாமல் பெரும் அவதியில் அல்லல்படுகிறான். உள்ளே வெறுமை வந்து தின்ன, எழுந்து நிற்கவே முடியாத நிலை கொண்ட, இறைவணக்கமே கொள்ளாத அவன் இமயமலையேறி கைலாயம் காண ஆசை கொள்கிறான். உடம்பு தாங்காது, உயரம் ஏற முடியாது என்று பதறும் உற்றார், உறவினர், நண்பர் சொல் உதிர்த்து புறப்பட்டுப் போகிறான். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் கடப்பாறை இடியாய் முதுகெலும்பில் இறங்குகிறது வலி. வலியோடு பல லட்சம் அடிகள் எடுத்து மலையேறி,
கயிலாயத்தை நெருங்கும் போது அவனுக்கு ஏற்படும் அனுபவம், கங்கை வார் சடை மலையை கண்டதும் காணாமல் மறைந்த வலி, அங்கே நடந்த அனுபவம்… என மரணப் படுக்கையிலிருந்தவனின் (எழுத்தாளர் கோமல்) ஒரு உண்மை அனுபவத்தை கேட்டு உள்வாங்கி அற்புதமாய் தந்துவிட்டார் ஜெயமோகன்.
‘பெருவலி’ அற்புதமான உண்மைப் படைப்பு.
‘அறம்’ மிக அருமையான நூல். நூலை அனுப்பி வைத்த மலர்ச்சி மாணவர் கோவை பணப்பட்டி பொன்னுஸ்வாமிக்கு நன்றி!
பேரன்புடன்,
பரமன் பச்சைமுத்து
17.04.2016
சென்னை