இறைவனை ‘ஏகன்’ என்று சொல்லும் நான் ‘அநேகன்’ என்பதையும் மறுப்பதில்லை.
ஆல் அமர் செல்வர் தட்சினா மூர்த்தியையும் குருவையும் ஒன்றென ஏற்கனவே குழப்பியது போதாதென்று, சிவனும் ருத்திரனும் வேறு வேறு என்பது புரியாமல் இருவரையும் ஒன்றெனவும் குழப்பிக் கொள்கின்றனர் பலர் என மணக்குடித் தம்பிகள் சிலரிடம் சில முறை பகிர்ந்திருக்கிறேன். மறுக்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் தங்களது முறைகளைக் கண்டு தவித்தனர் அவர்கள். அதோடு விட்டுவிட்டேன் அதை அப்போதே.
இன்று இறையருளால் திருவருட்பாவின் ஒரு பாடலை படிக்க நேர்ந்தது. கருத்து உறுதிப்பட்டது.
….
‘ வான்காணா மறைகாணா மலரோன் காணான்
மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்
நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று
நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை
மான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற
வான்சுடரே ஆனந்த மயமே ஈன்ற
ஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும்
அன்பர்தமைக் கலந்துகொள்ளும் அமைத்து தேவே ‘
….
இறைவனை வானோரும், மறையருளிய முனிவர்களும், பிரமனும், திருமாலும், உருத்திரனும் காணாதவர்களாயினும், “நான்” என்ற தன்முனைப்பு காணாவிடத்து அதனைக் காணலாம் என்று நல்லோர்கள் நவிலும் நலமாய், உளக்கமலத்தை அலரச் செய்கின்ற வான்சுடராய், ஆனந்த மயமாய், பெற்ற தாய்ப்பசுவைக் கண்டடையாத இளங்கன்றுபோலச் சுழன்று வாடுகின்ற அடியவர்களைக் கூடிக்கொள்ளுகின்ற பரிசுத்தமுடைய மகாதேவனே.
….
– பரமன் பச்சைமுத்து
சென்னை
01.05.2021