அதே சிறு பயிற்சி, ஒவ்வொரு நாளும் என சில பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது, அவை ஈட்டித்தரும் பலன்களும் அதன் ஆழமும் அதிகமாயுள்ளன.
குதிகால்களை உயர்த்தி, மொத்த உடலையும் முன்னங்கால்களில் நிறுத்தி கைகளை உயர்த்தி விரல்களைக் கோர்த்து வானை நோக்கித் தள்ளிய படி சில மூச்சுகளுக்கு நிற்கும் தாடாசனமும்,
பாதங்கள் அரையடி இடைவெளியில் எனும் நின்ற வாக்கிலிருந்து மூச்சை வெளியேற்றியபடியே கைகளை வெளியே நீட்டி குனிந்து தரையைத் தொட்டு அதே நிலையில் சில மூச்சுகள் என்ற நிலையில் இருக்கும் பாதஹஸ்தாசனமும்… சில நொடிகளில் இடுப்புத் தசைகளை, வயிற்று தசைகளை, நெஞ்சுக்கூட்டில் ஆழ்ந்து ஏறி இறங்கும் மூச்சின் அளவை, உடலின் உணர்வை என மொத்தத்தையும் மாற்றிப் போட்டுவிடுகிறது. ‘எந்த மத்த வொர்க் அவுட்லயும், இந்த ஃபீலிங் வர்றது இல்லையே! எவனய்யா இந்த யோகாவை கண்டுபிடித்தான்! ச்சே! அவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!’ என்ற என் வழக்கமான முணுமுணுப்பு இன்னும் கூடுதல் கனம் பெறுகிறது ஒவ்வொரு முறையும்.
அதே அணுத் தைலம், ஒரு சொட்டு நாசியில் ஒவ்வொரு நாளும், ஆனால் அது புரியும் வேலைகளை உணர முடிகிறது. சளியே இல்லாத நாளிலும் சில நொடிகளில் எங்கிருந்தோ கோழையைக் கொண்டு வந்து இறக்குகிறது. எங்கோ உள்ளே உறைந்திருப்பதை உருக்கிக் கொண்டு வந்து என் சுவாசப்பாதையை சுத்தமாக்கி செப்பனிடுகிறது ஒவ்வொரு நாளும். ‘கண் பொலிவு பெற மூக்கின் உள்பகுதி நரம்புகள் தூண்டப்பட வேண்டும்!’ என்று அணுத்தைலத்தை பரிந்துரைத்த கேரள ‘ஸ்ரீதரியம்’ மருத்துவருக்கு எவ்வளவு நன்றி் சொன்னாலும் தகும்.
அதே சிறு பயிற்சிகள், ஒவ்வொரு நாளும் என தொடர்ந்து செய்யும் போது, அவை ஈட்டித்தரும் பலன்களும் அதன் ஆழமும் அதிகம், அதிகம்! அனுபவிக்கிறேன் நான்! அதைப் பகிர்கிறேன், என் கடமை அதுவென.
வாழ்க! வளர்க!
– பரமன் பச்சைமுத்து
29.05.2022
#Yoga
#Thadasanam
#PathaHasthasanam
#AnuThailam
#Naseeyam
#Health
#Fitness
#Paraman
Facebook.com/ParamanPage