போகி என்றொரு பெயரில்,
போன வருஷத்து குப்பை
எதையாவது
போட்டுத் தீயிலிட்டுக்
கொளுத்தி
பெரும்புகைக் கிளப்பி
பெரியவர்கள் மூச்சுத்திணற,
பாரின் வளி மண்டலத்தில் வலி உண்டாக்கியது போதும்!
‘அகம்’ என்றால் வீடு என்றொரு பொருள் உண்டென்று நமக்கு வசதியானதை எடுத்துக் கொண்டு,
புற அழுக்குகளை பழங்குப்பைகளை களைந்து,
தீயிட்டு காற்றில் குப்பையைக் கலந்தது போதும்.
அழுக்காறை,
கெடும் அவாவை,
இன்னாச் சொல்லை,
புறங்கூறும் போக்கத்தப் பொழப்பை,
வளர்வதைக் கண்டு வயிறு எரிவதை,
காசு செய்ய மாசு செய்வதை,
‘நான்’ என்னும் பெரும் அழுக்கை,
‘எனக்கே’ என்னும் துணை அழுக்கை,
கூட்டிப் பெருக்கித் தானே வளரும் இந்த அழுக்குகளை,
கூட்டிப் பெருக்கிக் குப்பையில் தள்ளிக் கழிப்போம்,
தீக்குத் தின்னக் கொடுப்போம் !
அகக் குப்பைகளைக் தீயிட்டுப் பொசுக்குவோம்,
வாழ்க்கை முழுக்க
தைத் திருநாளாய்
வளம் பொங்கும்
நலம் தங்கும்!
நிஜமான அந்தத்
தை பிறக்கட்டும் உங்கள் நெஞ்சில்,
வழி பிறக்கட்டும் உங்கள் வாழ்வில்!
இறையருளால்
ஏற்றமும், இன்பமும்
பெருகட்டும் உங்கள் வாழ்வில்…
தைத் திருநாள் வாழ்த்துக்கள் !
பொங்கலோ பொங்கல் !
பிரியமுடன்,
பரமன் பச்சைமுத்து