காடு, மலை, பள்ளத்தாக்கு… தேக்கடி. – 1 : பரமன் பச்சைமுத்து

மலைகள் அழகு, காடுகள் அழகு என்றால் மலையும் காடும் புணர்ந்த குறிஞ்சி முல்லை இடம் எப்படி இருக்கும் அழகோ அழகுதானே! கூடவே வற்றாத ஒரு பெரிய காட்டாறும் சேர்ந்து விட்டால் எப்படியிருக்கும் கற்பனை செய்யுங்கள்.

காலங்காலமாக மன்னன், பளியன், ஊராளி இன பழங்குடி மக்கள் மகிழ்ந்து குலாவி வாழ்ந்த இந்தப் பகுதி பல்வகை விலங்குகள் செறிந்திருந்த செழிப்பான அடர் காடாக பரவிக் கிடந்தது.

அந்த நிலத்தின் மிகப் பெரிய ஆறு அது என்பதால் அதை ‘பேரியாறு’ என்றழைத்தனராம். எழில் கொஞ்சும் இந்த ஆற்றின் கரையில்தான் சேரன் தன் குடும்பத்துடன் வந்து தங்கி இயற்கையை கண்டு மகிழ்ந்தான் என்கிறது சிலப்பதிகாரம்.

“நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை
இடுமணல் எக்கர் இயைந்தொருங் கிருப்ப”

இந்த ஆறு மேற்குக் கடற்கரையில் விழுந்து கலந்த இடத்தில்தான் சேரர்களின் முசிறித் துறைமுகம் இருந்தது.
யவணர்களின் கலங்கள் இந்தப் பேரியாற்றின் கரையிலிருந்து மிளகு கொண்டு போனதாக அகநானூற்றுப் பாடல் சொல்கிறது. பேரியாற்றின் முகத்துவார முசிறியிலிருந்து நைல் நதிக்கரையின் பண்டைய காப்போடஸ் நகருக்கு வணிக ஒப்பந்தம் இருந்ததாகவும் அது ஆஸ்திரிய நாட்டில் வியன்னா அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும், அதன் நகல் ஒன்று தற்சமயம் கரூரில் காப்பகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்புகள் சொல்கின்றன.

பேரியாற்றின் நீர்வளம் இந்தப் பகுதியில் பரவிக் கிடந்த காடுகளை செழிப்பாக்கி வைக்க, காடு பல்வேறு விலங்குகளால் நிறைந்திருந்தது. அதனாலேயே திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசர்கள் வரை அதை வேட்டையாடும் பகுதியாகவே பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

மிக மிக உயரமான வாழையும், கமுகும், பல்வேறு காட்டு மரங்களும் செறிந்திருந்தாலும், அதிக அளவில் ‘தெக்கு’ வளர்ந்து கிடந்தன அக்காடுகளில்.

மன்னர்கள் காலம் முடிந்து பிரித்தானியர்கள் வந்த போது,
கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் உயரத்தில் பரவிக்கிடந்த இந்தக்காட்டின் தட்பவெப்பம் அவர்களை அடித்து ஈர்த்து மயக்கியது. பாரதத்தின் பல இடங்களி்ல் செய்ததைப் போல தங்கள் தேவைகளுக்காக காடுகளை மரங்களை அழித்து காப்பி, தேநீர், மசாலா பயிர்களை வளர்க்கும் தோட்டங்களாக மாற்றிக் கொண்டனர்.

வற்றாத காட்டாற்றின் வெள்ளம் கடலில் கலப்பதைக் கண்ட பிரித்தானியர்கள் அதை அணை கட்டி மடை மாற்றி விட முடிவு செய்து அதை செய்தும் முடித்தனர்.

‘பேரியாறு’ என்று அழைக்கப்பட்ட அந்த வற்றாத பெரிய ஆற்றை ஆங்கிலேயர்கள் ‘பெரியாறு’ என்ற ஒலிக்குறிப்பில் விளிக்க, சங்க இலக்கியத்து பேரியாறு பெரியாறு என்று மருவியது.

மலையாளத்தில் ‘தெக்கு’ என்று சொல்லப்படும் தேக்கு மரங்கள் நிறைந்த அந்த இடம் ‘தேக்கடி’ என்று சொல்லப் பட்டது.

நிற்க!

(வரலாறு இருக்கட்டும், கொஞ்சம் நிகழ்காலத்தையும் பார்ப்போம்!)

சேரர்களும், திருவிதாங்கூர் அரசர்களும், பிரித்தானியர்களும், பென்னி குயிக்கும் இருந்த அதே குறிஞ்சி முல்லை பள்ளத்தாக்கு பகுதிக்கு நாமும் வந்திருக்கிறோம்.

தேக்கடியிலிருந்து மலர்ச்சி வணக்கம்!

மயக்கும் கேரள உணவில் என்னைப் போன்ற மரக்கறி (சைவ உணவு) கொள்வோரின் மனங்கவர்ந்தவை பழம் பொரி, அப்பம், புட்டு, கடலைக்கறி, ஸ்டூ எனப்படும் சொதி, தலை வாழை இலை சாத்யா உணவின் அரிசிச் சோறு வகைகள் (அசைவம் நீங்கலாக மற்றவை அனைத்தும்)

இன்று நெய்ச்சோறு என்ற அசல் கேரளத்து அட்டகாச உணவு ஒன்றை உண்டு பார்க்கும் வாய்ப்பைப் பெற்றோம். சீரக சாலை (சீரக சம்பா அரிசி), நெய் சேர்த்து செய்யப்பட்ட சோறு. தூவிக் கொள்ள ஒரு விதமான பருப்பு பொடி தருகிறார்கள். எந்தத் தொட்டுக்கையும் இல்லாமலே இவர்களது நெய்ச்சோறு அசத்துகிறது. நானும் முகுந்தனும் சேர்த்து ஒரு சட்டி நெய்ச்சோற்றை முடித்து விட்டோம்.

( படத்தில் அப்பம், நெய்ச்சோறு, பரமன் )

(தொடர்வோம்)

– பரமன் பச்சைமுத்து
கிளப் மகிந்த்ரா, தேக்கடி
30.01.2025

#ParamanTouring #ParamanLifeCoach #பரமன்பச்சைமுத்து #ParamanPachaimuthu #தேக்கடி #Thekkady #Periyaru #periyarlake

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *