காடு, மலை, பள்ளத்தாக்கு… தேக்கடி – 3 : பரமன் பச்சைமுத்து

*3*

காடென்பது வெறும் காடல்ல. கடலைப் போல அது ஒரு தனி உலகம். இந்த உலகம் சீராக இயங்குவதற்காக இயங்கிக் கொண்டிருக்கும் உலகம்.

காடென்பது வெறும் மரமல்ல, ஓர் உயிரியல் கூட்டமைப்பு. புல், பூண்டு, மரம், செடி, கொடி, புழு, பூச்சி, பறவை, விலங்கு, ஒட்டுண்ணி, பாக்டீரியம், நுண்மி என பல்லுயிரும் சேர்ந்து இயங்கும் ஒரு சூழலியல் தொழிற்சாலை. சுற்றுச் சூழலின் வலியை நீக்க வளியை இழுத்து குளிப்பாட்டி வழித்துத் துடைத்தெடுக்கும் தொழிற்சாலை.

காட்டில் பயணிப்பது ஓர் அனுபவம். காட்டின் அமைதியை ஊடறுக்காமல் அமைதியாய் காட்டை கவனித்து அனுபவிப்பது ஓர் அனுபவம். எங்களுக்கு அந்த அனுபவத்தை அள்ளித்தந்தது பிரபஞ்சம்.

தை மாத அதிகாலை இரவைப் போல இருட்டு, அதுவும் மலைப் பிரதேச காட்டுப் பகுதி என்பதால் அடர் இருட்டு. ஆறு மணிக்கு மேற்புரம் மூடாக்கு இல்லாத திறந்த ஃபோர் கியர் மகிந்திரா தார் வண்டியில் புறப்பட்டோம். இருமங்கிலும் காடு, நடுவே சாலை, தலையிலிருந்து நெஞ்சுப் பகுதி வரை வண்டிக்கு மேலே எனும் படி எழுந்து நின்று பயணித்தோம். பொழுது புலர புலர எங்கள் வண்டி வேகங்குறைய குறைய என மெதுவான பயணம்.

அதிகாலைக் குளிர் முகத்திலறைய, இருமங்கும் விரிந்த காடு அகத்திலறைய… புது அனுபவம். கண்களால் நாசியால் மனதால் காட்டை உறிஞ்சித் திளைத்தோம். இரண்டரை மணி நேரம் காடு… காடு… கானுயிர்… காடு…. இப்படியோர் அனுபவம் இதுவரை பெற்றதில்லை.

உயர்ந்த மரங்களின் உச்சியில், சோஃபாவில் உட்கார்ந்திருப்பது போல் அநாயாசமாக உட்கார்ந்திருக்கும்
கன்னங்கரேர் நீலகிரி லங்கூர் எனப்படும் நீண்ண்ண்ட வால் கொண்ட கருமந்திகளின் அதீத அமைதி தந்த வியப்பு, மேகத்தைக் கிழித்து நிற்கும் மலைமுகட்டின் மேல் அதிகாலை நேரத்திலேயேகூட்டமாய் ஏறி நிற்கும் யானைகள் தந்த சிலிர்ப்பு, தடாலென எங்கிருந்தோ ஓடி வந்த அதீத நீளமும் குறைவான உயரமும் கொண்ட கொழுகொழு காட்டுப் பன்றி தந்த களிப்பு, ‘ஒரு அணில் இவ்வளோ பெருசு இருக்குமா!’ என்றளவுக்கு நமக்குள் கருப்பு மலபார் அணில் உருவாக்கிய கணக்கு, ‘ஓ! இதுதான் பாம்பை மட்டும் தேடித் தேடி வேட்டையாடித் தின்னும் ஸ்னேக் கேட்சர் ஈகிள், சைஸு பயங்கரமா இருக்கு, முகமும் கழுத்தும் எப்படி இருக்கு பாப்போம்!’ என்று கவனத்தில் வந்த குவிப்பு, நாம் இரண்டு கைகளையும் பக்கவாட்டில் விரித்து நீட்டியது போல பெரிய இறக்கையை விரித்து வெய்யிலில் காய வைத்துக் கொண்டிருந்த நீர்க் காக்கையைக் கண்டதில் உண்டான முத்தாய்ப்பு என கானுயிர்கள் தந்ததெல்லாம் வித்தியாச அனுபவம்.

கவியாறு அணைப்பகுதியைக் கடந்ததும் கேரள அரசின் சுற்றுலா கழகம் வருகிறது. ஒரு நாளைக்கு வெறும் 130 பேருக்கே அனுமதி (முதல் நாளே பதிவு செய்ய வேண்டும், கிளப் மகிந்திராவில் நமக்கு பதிந்து வைத்திருந்தார்கள்), பிளாஸ்டிக் பாட்டில்கள் அனுமதியில்லை, ஒருவேளை எடுத்து வந்தால் அதை குறித்துக் கொண்டு ‘திரும்ப வரும் போது கொண்டு வந்து காட்ட வேண்டும்!’ என்பது மாதிரியான கடும் விதிகளை செயல்படுத்தி காட்டின் சூழலைப் பாதுகாக்கிறார்கள்.

நாம் வந்த வாகனமும் ஓட்டுநரும் ஒரு கோட்டுக்கு மேல் அனுமதியில்லை, அங்கிருந்து நமக்கு ஒதுக்கப்பட்ட ‘ட்ரெக்கிங் கைடு’ நம்மை அழைத்துக் கொள்கிறார். நமக்கு காலை உணவு தந்து சில நெறிமுறைகளை சொல்லிவிட்டு மலையேற்றம் தொடங்குகிறது.

மலையேற்றத்திற்கான ஸ்போர்ட்ஸ் ஷூ, அட்டைகளிடமிருந்தும் செடி கொடிகளிடமிருந்தும் உடலை பாதுகாத்துக் கொள்ள கால்கள் முழுவதையும் மறைக்கும் படியான உடை ஆகியவை இருப்பது மிக மிக நல்லது.

( 15 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று பகுதியில் ஒரு மழைக்காலத்தில் போன ட்ரெக்கிங்கில் அட்டைகளிடமிருந்து காத்துக் கொள்ள ஷீ, ஸாக்ஸ் முழுவதிலும் உப்பை தூவிக் கொண்டு போனேன். அப்படியும் கால்களில் ஒட்டிக் கொண்டு ரத்தம் குடித்துக் கொண்டு வந்தன சில அட்டைகள். இப்போதெல்லாம் புகையிலையில் ஊற வைத்த சாக்ஸ் தருகிறார்களாம் இதற்கென. இந்த சீசனில் அட்டைகள் இல்லை)

ஏலக்காய் தோட்டத்தில் தொடங்கிய எங்கள் நெடும் மலையேற்றம், ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிய போது திடீரென காடு அடர்த்தியாகவும் பகலிலேயே இருட்டைப் போல இருப்பதையும் உணர்ந்தோம்.

காட்டின் வாடை மாறியது, காட்சி மாறியது, அமைதி ஆழமானது.

‘சார், இதுக்கு நேரா அந்தப் பக்கம் இருக்கு சபரிமலை!’

‘ஓ! அப்ப அவரு புலிவேட்டைக்குப் போனதா சொல்வாங்களே அந்த காடு இங்க இருக்கா?’

‘இருக்கே, நீங்க இப்ப அதிலதான் நிக்கறீங்க!’

‘இந்த காட்டுல புலி இருக்கு!’

‘1 இல்ல, 42 புலிகள் இருக்கு!’

‘ஓகோ!’

‘900 யானைகள் இருக்கு, 40 வகையான பாம்புகள் இருக்கு, சிறுத்தைகள், காட்டுப்பன்றி என சிங்கம் தவிர மிதி எல்லா விலங்குகளும் இருக்கு!’

‘இப்ப இந்தப் புதருக்கு அந்தப் பக்கம் கூட இருக்கலாம்!’

‘ஆமாம்! நாம் ஒரு தடவை புலியை பாக்கறத்துக்கு முன்னே புலி நம்மள 40 தடவ பாத்துரும்!’

‘இதென்ன சார்?’

‘மெதுவா பேசுங்க. யானை வந்துட்டு போயிருக்கு. இந்த மரத்துல பட்டையப் பாருங்க, கீழே தடத்த பாருங்க!’

‘தேக்கடியில் யானை போல நெனைச்சேன், ஒன்ன நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்!’ என்ற ‘அண்டக்காக்கா கொண்டைக்காரி’ பாடல் நேரங்கெட்ட நேரத்தில் மண்டைக்குள் ஓடியது.

அப்போது…

(தொடர்வோம்)

– பரமன் பச்சைமுத்து
பெரியார் புலிகள் காப்பகம், கவியாறு
31.01.2025

#ParamanTouring #ParamanLifeCoach #பரமன்பச்சைமுத்து #ParamanLifeCoach #ParamanPachaimuthu #தேக்கடி #Thekkady #Periyaru #periyarlake #Pennycuick #KingSethupathy #Madurai #PeriyarNationalPark #KeralaTourism #Westernghat #GaviForest #GaviTrek

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *