எதற்காகச் செய்கிறோம் என்று தெரிந்து செய்யும் போது எழும் உணர்வு எல்லாக் களைப்புகளையும் அடித்து அகற்றி விடுகிறது.
பின்னிரவு வரை புதுச்சேரியில் ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்திவிட்டு, இரவு பயணித்து நள்ளிரவில் வீடுவந்து, அதிகாலையே புறப்பட்டு தாம்பரத்தைத் தாண்டி பூந்தண்டலத்திற்கு பயணித்து கல்லூரி வளாகத்தில் போய் நிற்கும் போது… அறுநூற்றைம்பது ஏழை மாணவர்களின் வாழ்வில் மாற்றம் வர ஒரு கருவியாய் நிற்கிறோம் என்ற உணர்வே ‘ஏஏஏஏயே!’ என்றோர் உற்சாகத்தைத் தருகிறது.
தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து பொறியியல், பொருளாதாரம் என மேற்படிப்பு தந்து உதவும் ‘மாற்றம் ஃபவுண்டேஷன்ஸ்’ அமைப்பிற்காக, தமிழகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கு ‘மலர்ச்சி உரை’ ஆற்றும் வாய்ப்பை வழங்கியது வாழ்க்கை இன்று.
‘இனிமேல் பயப்பட மாட்டேன் சார்!’ என்று பகிர்ந்த சுபாஷினியும், ‘தயங்க மாட்டேன், எறங்கி வேலை செய்வேன்!’ என்று பகிர்ந்த கார்த்திகேயனும், ‘மன அழகுதான் அழகு’ என்று பகிர்ந்த சத்தியபாமா கல்லூரியின் ஜெயஸ்ரீயும் என மலர்ச்சி உரைக்கு பின்பு தாங்கள் கற்றதைப் பகிர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்களின் பகிர்வு நல்லுணர்வைத் தந்தது.
உள்ளே நுழைகையில் என்னை வரவேற்கையில் ‘பரமன் சார்! நைட்டெல்லாம் ட்ராவலா, தூங்கவேயில்லையா!’ என்று மாற்றம் ஃபவுண்டேஷன்ஸின் நிறுவனர் சுஜித் கேட்டது நினைவிற்கு வருகிறது. இத்தனை மாணவர்களுக்கு வளர்ச்சி வர ஒரு கருவியாய் இருந்தோம் என்ற உணர்வோடு, எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன், ‘இது நல்ல ஞாயிறு! இப்பப் போய் தூங்கினால் போச்சு!’
இல்லையா?!
– பரமன் பச்சைமுத்து
சென்னை
20.01.2019