நாளையிலிருந்து ஊரடங்கு என்பதால் அதிகாலையில் மூக்கில் விடும் அணு தைலம், நாளையிலிருந்து தொடங்கும் மூச்சு ‘ஆன்லைன்’ வகுப்பிற்கு தேவைப்படும் ‘மைக்’கிற்கான AA பேட்டரிகள் வாங்க கடைகளுக்குப் போயிருந்தேன்.
அடையார் மெர்ஸி எலக்ட்ரானிக்ஸ், திருவான்மியூர் இம்ப்காப்ஸ், ஆர் ஏ புரம் ஏகே டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என எல்லாவற்றிலும் ஏக கூட்டம்.
திருவான்மியூரிலிருக்கும் சித்த மருந்துக்கடைக்கு ஆர் ஏ புரத்திலிருந்து நாளை முதல் வண்டியெடுத்துக் கொண்டு போக முடியாது, இன்றே போனால்தான் உண்டு என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால், அதே தெருவில் இருக்கும் மளிகைக் கடையும், காய்கறி, பழக்கடைகளும் எப்போதும் போல தொடர்ந்து இருக்கத்தானே போகின்றன! இன்றே அலறியடித்துக் கொண்டு ஓட வேண்டியதில்லையே!
பத்து நாட்களாக தொலைக்காட்சி பார்க்கவில்லை, பார்க்க முடியவில்லை. செய்தித்தாள்கள் மட்டுமே. நேற்றிரவு சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூடியவர்கள் என செய்தியும் படமும் பார்த்தேன். அவர்கள் நிலையும் மனநிலையும் புரிகிறது. இவர்கள் வழியே இவர்களோடு சென்னையிலிருந்து ஊர்களுக்குப் பரவப் போகிறது கொரோனா. அப்படியே ஊர்களுக்குப் போனாலும் கூட, அடுத்த 14 நாட்கள் ஊரடங்கு முடக்கம் என்பதால், தொற்று சங்கிலி உடைந்து அங்கங்கே முடிந்து விடும் பெருமளவில் என்பது நம்பிக்கை.
எல்லோரும் வெளியில் திரிகிறார்கள் கூட்டம் கூட்டமாக. நாளை காலை கூட கடைகளுக்குப் போகலாம். இன்று வீட்டில் இருங்கள்.
‘இரட்டை மாஸ்க்’தான் இப்போதைய வழி!
– பரமன் பச்சைமுத்து
ஆர் ஏ புரம்,
09.05.2021