ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு நன்றி!
அதே ரெம்டெசிவிர் மருந்தை ரூ. 400க்குத் தயாரித்துக் காட்டியுள்ளது ஒரு நிறுவனம். ஆனால், உலகளாவிய ஒப்பந்தம், காப்புரிமை என்ற விதிகளால் கைகள் கட்டப்பட்டு நிற்கிறது அம்மருந்து நிறுவனம். இது போன்ற தொற்றுக்காலங்களில் மருந்தின் அடிப்படையை அனைவருக்கும் பகிர்ந்து உலகத்துக்குப் பேருதவி புரிய வேண்டும் ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகள் செய்யும் நிறுவனங்கள் ( இப்போது ‘பாரத் பயோடெக்’ தனது ‘கோவாக்ஸின்’ அடிப்படையை பல நிறுவனங்களுக்குப் பகிர்ந்துள்ளது போல!). இது ஒரு புறம்.
தமிழக அரசின் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே இனி கிடைக்கும் என்று முறைப்படுத்தப்பட்டதும் நன்று.
ஆனாலும், ரெம்டெசிவிர் மருந்தை வாங்க கூடும் கூட்டத்தையும் நெரிசலையும் தள்ளுமுள்ளுவையும் பார்க்கும் போது, ‘ஒருத்தருக்கு மருந்து வாங்க வந்து கொரோனாவை குடும்பத்துக்கே வாங்கிட்டுப் போறானுவலே!’ என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.
இதற்குப் பதிலாக, தேவையான நோயாளிகளுக்கு தேவையான மருத்துவபனைகளுக்கு நேரடியாகத் தரப்படும். வெளியில் விற்கப்படமாட்டாது என்ற ஒரு முறைமையைக் கொண்டு வந்தால் என்ன தமிழக அரசு. புற்றுநோய் சிகிச்சையில் உடலை சோதிக்கத் தரப்படும் கதிரியக்க திரவ மருந்தை அவ்வப்போது விண்ணப்பித்து பெறுவதை போல, இதையும் செய்யலாமே. வேண்டுமானால் சில பெட்டிகள் கூடுதல் ஸ்டாக்காக வைக்க அனுமதிக்கலாமே.
நோயாளிகளும் மருந்தை பெறுவர். ஒரே இடத்தில் கூட்டம் நெரிசல் வந்து தனி நபர் இடைவெளி கட்டுப்பாடுகள் நொறுங்கி் நோய்த்தொற்று வருவதைத் தவிர்க்கலாமே!
இதுதான் சரியான வழி எனலறில்லை. இந்த திசையில் செயல்படலாமே!
– மணக்குடி மண்டு
16.05.2021