மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசமாகத் தரப்படும் என்ற மத்திய அரசின் கொள்கை பாராட்டுதலுக்கு உரியது.
எவ்வளவு அச்சங்களை பலர் கிளப்பிய போதும், அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு எல்லா ஊரிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் நீண்ட பெரும் வரிசையில் நிற்கிறார்கள் என்பது நல்ல செய்தி்.
முதலில் நடுவனரசுக்கு ஒரு விலை, மாநில அரசுக்கு ஒரு விலை என்று தொடங்கி, மாநில அரசுகளே நேரடியாக ஒப்பந்தம் போட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று அடுத்து அனுமதித்து (இதை சரியாக விளங்கிக் கொள்ளாத சில தம்பிகள் ‘மாநில சுயாட்சிடா, கெத்துடா, நாங்களே வாங்கறோம்டா!’ என புரிந்து கொள்ளாமல் உணர்ச்சி வசப்பட்டு மீம்ஸ் போட்டு), ‘மாநிலத்திற்கெல்லாம் நேரடியாகத் தர முடியாது. இந்திய அரசு ஒப்புதல் வேண்டும்!’ என்று டெல்லி அரசிற்கு அமெரிக்க தடுப்பூசி நிறுவனம் மறுப்பு தெரிவிக்க, அதன் பிறகு நடுவனரசே வாங்கி மாநிலங்களுக்குத் தரும் என அறிவித்து, ‘இலவசமாக வேண்டும்’ என்று பிரனாயி விஜயன் போன்றோர்களால் கிளப்பப்பட்டு அது ஊடகங்களாலும் பேசப்பட்டு, மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி தரப்படும் என்ற நிலை வந்தடையப் பட்டிருக்கிறது.
ஏப்ரலிலேயே இப்படி திட்டவட்டமான முடிவை எடுத்திருக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது.
ஜனவரி மாதம் தடுப்பூசி திட்டம் தொடங்கிய போது ஜூலைக்குள் 60 கோடி என்ற இலக்குடன் தொடங்கப்பட்டது. 4 மாதங்கள் கழித்து மே வரையில் 20 கோடிப் பேருக்குக் கூட போடப்படவில்லை என்பதே நிதர்சனம்.
தடுப்பூசிகள் வாங்குவதற்கு பயாலாஜிக்கல் – இ நிறுவனத்திடம் 1500 கோடி முன்பணம் தரப்பட்டுள்ளது. பாராட்டப் பட வேண்டிய நல்ல செயல்.
ஃபைஸர், மாடர்னா போன்ற அமெரிக்க தடுப்பூசிகளை வாங்கச் சொல்லி அழுத்தம் கொடுக்க சில எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பணம் தரப்பட்டுள்ளது என்று சில பகிர்வுகள் உலா வருகின்றன. இதற்கு, இது வரை ஆதாரங்கள் எதுவும் இல்லை.
தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கு வேண்டிய ஃபைசர், மாடர்னா அல்லது வேறு எதையும் நேரடியாக வாங்கி விலை வைத்து போடலாம், அரசு இந்திய தயாரிப்பு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து இலவசமாகத் தரும் என்ற முடிவை பரிசீலிக்கலாம்.
– மணக்குடி மண்டு
12.06.2021