கீழ்த்தளத்து ரத்த வங்கியிலிருந்து செல்லிடப் பேசியில் அழைப்பு வர கீழே ஓடி வருகிறேன்.
சாயிபாபா சிலையை வணங்க வந்த சுவாசக்கவசம் அணிந்த ஒரு வயதான பெண்மணி நம்மை கவனித்து விட்டு இரு கைகளாலும் வணங்கிக் கொண்டே நம்மை நோக்கி விரைந்து வருகிறார்.
‘நம்மளயா கும்படறாங்க!’
‘பரமன் பச்சைமுத்து சார்!’
‘ஆமாங்க! நீங்க?’
‘என் பையனுக்கு கொரோனா வந்து இத்தன நாளா ஐசியுல இருந்தான். இப்பதான் நார்மல் வார்டுக்கு மாத்தனாங்க. உங்கள பாத்ததும் சந்தோஷம்ங்க’
‘நீங்க?’
‘திருவண்ணாமலை செந்திலோட மாமியாருங்க நான்’
‘கத்தார் செந்திலா?’
‘ஆமாங்க!’
‘ஷாலினி?’
‘ஆமாங்க. வாழ்த்துங்க ஐயா!’
‘நிச்சயம் பிரார்த்தனை பண்றேங்க!’
‘நிறைய எடத்துக்குப் போயி, சீரியஸா ஆயி, கடைசியில இங்க வந்து ஐசியுல சேத்தோம்ங்க சார்!’
மேல் தளத்தில் என் அம்மாவிற்கு அறுவை சிகிச்சை நடக்கிறது, கதவுக்கு வெளியே சில மணி நேரங்களாக காத்திருக்கிறேன், ‘அறுவை சிகிச்சைக்கு உங்கள் அம்மாவுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. நீங்கள் தர்றீங்களா? ஏற்பாடு பண்றீங்களா?’ என்று கேட்டதால் கீழே ஓடி வந்ததையும், அவர்களிடத்தில் சொல்ல வேண்டியதில்லையே.
‘உங்க பையன் நல்லாயிடுருவாங்க!’
‘நன்றிங்க சார்’
திரும்பவும் மேல் தளத்திற்கு வந்து கதவை நோக்கியபடி அமர்ந்திருக்கிறேன்.
‘அம்மா… தோ இங்கதான்… வெளியில்தான் உட்கார்ந்திருக்கிறேன்!’
– பரமன் பச்சைமுத்து
குளோபல் மருத்துவமனை
16.06.2021